அமைச்சர் பதவியை தலைவர் முடிவு செய்வார்... எனக்கு கொடுங்கன்னு கேட்கவா முடியும் - உதயநிதி ஸ்டாலின்
சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அமைச்சர் பதவி எல்லாம் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: அமைச்சர் பதவி எல்லாம் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதெல்லாம் தலைவர் முடிவு செய்ய வேண்டியது என்று திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நான் போய் எனக்கு அமைச்சர் பதவி கொடுங்கன்னு கேட்கவா முடியும் என்றும் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் களத்தில் அறிமுக வேட்பாளராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டாலும் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தேர்தலில் வெற்றி பெற்றால் அதுவும் திமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அமைச்சர் பதவி நிச்சயம் என்ற பேச்சு அடிபடுகிறது.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை ஒரு முன்மாதிரி தொகுதியாக ஆக்குவேன் என்று வாக்கு சேகரித்து வரும் உதயநிதி ஸ்டாலின் பிசியான பிரசாரத்திற்கு இடையேயும் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
இளைஞரணி செயலாளர்
கட்சியில் இளைஞரணி செயலாளர் பொறுப்பு எனக்கு கொஞ்சம் சீக்கிரமாகத் தான் கிடைத்திருக்கிறது. மாவட்ட செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி தம்பிக்கு இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு கொடுத்தால் தான் இளைஞர்களை கட்சியில் சேர்க்க முடியும் என கூறியதால் தலைவர் வேறு வழியின்றிதான் இந்த பொறுப்பை எனக்கு அளித்தார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி வேட்பாளர்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி என் வீட்டுக்கு பக்கத்தில் இருப்பதால் அங்கு அதிக முறை சென்றேன். தேர்தலில் போட்டியிட நான் சேப்பாக்கம் தொகுதி கேட்டது உண்மை. தலைவரும் யோசித்து சொல்றேன் என்றார். நிர்வாகிகளின் முடிவையடுத்து என்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட தலைவர் சம்மதித்தார். இது ஒன்றும் நியமன பதவி கிடையாது. மக்களை சந்தித்து அவர்களின் நம்பிக்கையை பெற்று வாக்குகளை பெற்று வா என்று கூறி எனக்கு சீட் கொடுத்தனர்.
மு.க ஸ்டாலினுக்கு அடுத்து
திமுகவில் மு.க ஸ்டாலினுக்கு அடுத்து திமுக தலைவராக உருவெடுப்பதாக பேசப்படுகிறதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, நான் ஒரு தடவை கூட இன்னமும் எம்எல்ஏ ஆகவில்லை அதற்குள் இப்படியான கேள்வி கேட்டால் நான் என்ன பதில் சொல்வது என்று கேள்வி எழுப்பினார்.
நான் கேட்க மாட்டேன்
சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை ஒரு முன்மாதிரி தொகுதியாக ஆக்குவேன் என்று என அங்கிருக்கும் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளேன். அமைச்சர் பதவி எல்லாம் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறிய உதயநிதி அதெல்லாம் தலைவர் முடிவு செய்ய வேண்டியது என்று கூறினார். நான் போய் எனக்கு அமைச்சர் பதவி கொடுங்கன்னு கேட்கவா முடியும் என்றும் கேட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.