பொதுச்செயலாளர் பதவியை விடப்போவதில்லை... உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு: சசிகலா அதிரடி பேட்டி
சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்போவதாக சசிகலா கூறியுள்ளார்.
நாமக்கல்: சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழுவின் தீர்மானம் செல்லும் என்று சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியை யாரோ 4 பேர் முடிவு செய்ய முடியாது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலளாராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்ந்தெடுத்துள்ளதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

சசிகலா வழக்கு
இதை எதிர்த்து சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருவரின் வழக்குகளையும் நிராகரிக்க கோரி ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சசிகலா கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டு, அதனை உச்சநீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்ட நிலையில், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்று சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

டிடிவி தினகரன்
இந்நிலையில், அமமுக என்ற கட்சியை உருவாக்கி நடத்தி வருவதால், இந்த வழக்கிலிருந்து விலகி கொள்வதாக அதன் பொது செயலாளரான டிடிவி.தினகரன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கட்சியில் பொது செயலாளர் உரிமை கோரும் சசிகலா வழக்கை மட்டும் நீதிமன்றம் விசாரித்தது.

சசிகலா மனு தள்ளுபடி
சசிகலா வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில், சென்னை மாவட்ட 4-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ. ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார். அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்று, சசிகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும், சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழுவின் தீர்மானம் செல்லும் என்றும் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா பேட்டி
சசிகலா தற்போது கொங்கு மண்டலத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த தீர்ப்பு சசிகலாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் நகரில் ஆன்மீக பயணம் செய்து வரும் சசிகலாவிடம் தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த சசிகலா, பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்வேன் என்று சசிகலா கூறியுள்ளார்.

4 பேர் முடிவு செய்ய முடியாது
அதிமுக பொதுச்செயலாளர் பதவியை யாரோ 4 பேர் முடிவு செய்ய முடியாது. கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கவோ நீக்கவோ முடியும், இது எம்ஜிஆர் வகுத்து தந்த திட்டம் என கூறினார்.
அதனையடுத்து, பாஜக வளர நினைப்பதில் தவறில்லை, ஒரு புதுக்கட்சி தொடங்கினால் அவர்கள் வளரத்தான் நினைப்பார்கள்.

இதுவும் கடந்து போகும்
100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக நிலைத்து நிற்கும். ஜெயலலிதாவின் வாக்கை நிறைவேற்றுவதே என் கடமை. எனது 33 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இதுவும் கடந்து போகும் என்று சசிகலா கூறியுள்ளார். அதிமுக யாராலும் அசைக்க முடியாத கோட்டை; தொடர்ந்து மக்கள் பணி செய்வேன் எனவும் சசிகலா கூறினார். எது எப்படியோ பொதுச்செயலாளர் பதவியை விடப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் சசிகலா.












Click it and Unblock the Notifications