நேரடியாக களத்திற்கு போங்க.. 15 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சென்ற உத்தரவு.. சென்னையில் களமிறங்கும் டீம்
சென்னை: சென்னையில் தரமான சாலைகளை போட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு மிக தீவிரமாக இருக்கிறது. இதற்காக தலைமை செயலாளர் வெ இறையன்பு முதல் முதல்வர் ஸ்டாலின் வரை எல்லோரும் நேரடியாக களத்திற்கே சென்று ஆய்வு பணிகளை செய்து வருகிறார்கள்.
அதன்படி கடந்த போகி இரவு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தேனாம்பேட்டை மற்றும் வாரன்ஸ் சாலை மற்றும் மகாலிங்கபுரம் சாலைகளில் நடந்து வந்து சாலை பணிகளை சோதனை செய்தார். இரவு நேரத்தில் சாலை போடும் பணிகளை அவர் நேரில் பார்வையிட்டார்.
பழைய சாலையை அகழ்ந்துவிட்டு புதிய சாலை போடுகிறார்களா, சரியான கலவை பயன்படுத்தப்படுகிறதா, தார் முறையாக பயன்படுத்தப்படுகிறதா, சாலையின் மட்டம் எப்படி இருக்கிறது, சாய்தளம் இருக்கிறதா என்று சோதனை செய்தார்.

ஏன் சோதனை
முதல்வர் ஸ்டாலின் இப்படி திடீரென சோதனை செய்ய காரணங்கள் இருக்கின்றன. சென்னையில் சாலை மீது சாலை போட்டு வருவதால் வீடுகள் கீழே இறங்கி பள்ளமாகிக்கொண்டு இருக்கிறது. இதனால் மழை காலத்தில் தண்ணீர் வடிகாலுக்கு செல்லாமல் வீடுகளுக்குள் செல்லும் நிலை ஏற்படுகிறது. சென்னையில் லேசான மழைக்கே வெள்ளம் ஏற்பட இதுதான் காரணம். அடுத்த வருட மழையில் கண்டிப்பாக சென்னையில் வெள்ளம் தேங்காது என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில் அதை நிறைவேற்றும் முதல் நடவடிக்கையாக சாலை பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

தலைமை செயலாளர்
முதல்வர் மட்டுமின்றி சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தலைமை செயலாளர் இறையன்பு, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர்கள் எம்.எஸ்.பிரசாந்த், சிம்ரன்ஜீத் ஆகியோர் இரவோடு இரவாக சாலை போடும் பணிகளை ஆய்வு செய்தனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலை பணிகளை அடுத்தடுத்து இவர்கள் நேரில் ஆய்வு செய்தனர். முதல்வரின் உத்தரவின் பெயரில் அதிகாரிகள் நேரடியாக களமிறங்கி ஆய்வு பணிகளை செய்து வருகிறார்கள்.

அதிகாரிகள் நியமனம்
இந்த நிலையில்தான் சென்னையில் சாலை பணிகளை கண்காணிக்க நேரடியாக மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் களமிறக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே சென்னையில் கொரோனா பாதிப்பை கண்டறிய மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொரோனா தடுப்பு பணிகள், வேக்சின் செலுத்துவதை கண்காணித்து வருகிறார்கள். இவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக தற்போது சாலை போடும் பணிகளை கவனிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகள் களமிறக்கப்பட்டனர்
சாலை பணிகளை நேரில் பார்வையிட வேண்டும். சாலை பணிகளில் முறைகேடு நடக்காமல் பார்க்க வேண்டும் என்று இவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. திருவொற்றியூர் மண்டலத்துக்கு - ஷ்ரவன் குமார் ஜடாவத். மணலிக்கு - கணேசன். மாதவரம்- சந்தீப் நந்தூரி தண்டையார்பேட்டைக்கு - டி.ஜி.வினய். ராயபுரம் மண்டலத்துக்கு - விஜய கார்த்திகேயன். திரு.வி.க.நகர் மண்டலத்துக்கு- பிரதீப்குமார். அம்பத்தூர்- சுரேஷ் குமார். அண்ணாநகர் - பழனிசாமி. தேனாம்பேட்டை- ராஜாமணி. கோடம்பாக்கம் - விஜயலட்சுமி.

15 மண்டலம்
வளசரவாக்கம் - மணிகண்டன். ஆலந்தூர் - நந்த கோபால். அடையாறு - நிஷாந்த் கிருஷ்ணா. பெருங்குடி - ரவிச்சந்திரன். சோழிங்கநல்லூர் மண்டலத்துக்கு- வீரராகவ ராவ் ஆகிய 15 அதிகாரிகள் 15 மண்டலத்திற்கு களமிறக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சாலை பணிகள் நடக்கும் போது அந்த இடத்தில உதவிப்பொறியாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியில் பணிகள் முடிந்த பின்புதான் காசோலை வழங்கப்படும். மொத்தமாக பணிகளை செய்யும் முன் காசோலை வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சாலைகள்
சென்னையில் 312 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 1,656 பேருந்து மற்றும் உட்புறச் சாலைகள் சென்னையில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இதன் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றது. சென்னையில் இது போக 5270 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 34840 உட்புறசாலைகள் இன்னொரு பக்கம் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த சாலைகளை தற்போது மீண்டும் தோண்டி புதிய சாலைகள் போடப்பட்டு வருகின்றன.
Recommended Video

நிதி ஒதுக்கீடு
அதாவது சாலை மீதே சாலை போடாமல் ஏற்கனவே போடப்பட்ட சாலைகளை அகழ்ந்து எடுத்து புதிய சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற சாலை நிதி ஒதுக்கீடு, சிங்கார சென்னை 2.0, மாநில பேரிடர் நிவாரண நிதி ஆகிய நிதிகள் மூலம் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்குள் 800க்கும் மேற்பட்ட சென்னை சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications