தமிழகத்தில் மதுவிலக்கு செய்தால் பக்கத்து மாநிலம் செல்வார்கள்! அது நடக்கக்கூடாது - டிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: தமிழ்நாட்டில் இன்றைக்கு மதுவிலக்கு அமல்படுத்தினால் 70க்கு முன்பு இருந்தது போல் பாண்டிச்சேரிக்கு செல்வார்கள். ஆந்திரா, கேரளா, கர்நாடகா செல்லும் நிலை இருக்கும். அப்படியான சூழல் இருக்க கூடாது. இதனால் மத்திய அரசு அகில இந்திய அளவில் மது ஒழிப்புக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில் திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது மற்றும் போதைப்பொருள் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் இன்று நடந்தது. இதில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பேசினர்.

இந்த மாநாட்டில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் பங்கேற்றனர். அப்போது அகில இந்திய அளவில் மது விலக்குக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டதோடு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: போதைக்கு எதிரான பிரசாரத்தை, போதை செய்யும் தீமையை மக்களுக்கு எடுத்து சொல்லும் பிரசாரத்தை செய்வதற்கு இப்போது உள்ள நிதி என்பது ரூ.4 கோடி. அதனை ஆண்டுக்கு ரூ.200 கோடியாக உயர்த்த வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள் அல்லவா. போதை ஒழிப்பு பிரசாரத்துக்கு என்று தனியே ஆட்களை தேர்வு செய்து ஒவ்வொருவரிடமும் சென்று குடிப்பழக்கத்தால் வரும் தீமைகளை, குடிப்பதனால் குடும்பத்துக்கு வரும் இழுக்கு, குடிப்பதனால் அவர்களின் பிள்ளைகளுக்கு வருகின்ற கேடு இவற்றை எல்லாம் எடுத்து சொல்வதற்கான நிதியை அதிகரிக்க வேண்டும். இந்த நிதியை மத்திய அரசு அதிகரித்து தர வேண்டும்.
அந்த வகையில் முதல் கடமை மத்திய அரசுக்கு உள்ளது. அதாவது மாநில அரசுகளுக்கு உரிய நிதியை வழங்க வேண்டும். 2வது கடமை என்பது அகில இந்திய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த நடைமுறை செய்ய வேண்டும். இதனை செய்தால் தான் மதுப்பழக்கத்தை ஒழிக்க முடியும். அப்படி செய்தாலும் கூட மதுப்பழக்கத்தை ஒழிக்க முடியாது. டாஸ்மாக் கடைகளை அனைவரும் மூட வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் எல்லா டாஸ்மாக்கையும் மூடினாலும் கூட அதானி துறைமுகம் எல்லாம் இருக்கு.
சமீபத்தில் ஒரு செய்தியை பார்த்தேன். வெளிநாட்டில் இருந்து ராஜஸ்தானை சேர்ந்தவர் சென்னை வந்து இறங்கினார். சென்னையில் இருந்து ரயிலில் ராஜஸ்தானுக்கு டிக்கெட் போட்டவரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். அவரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் இருந்தது. குஜராத்திலேயே போதைப்பொருளால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை என்பது கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் 96 ஆக இருந்தது. இதனை குஜராத் அரசு அதனை ஏற்க மறுத்துவிட்டது. பீகாரில் 140 பேர் இறந்துள்ளனர். இந்த கெடுதல் நாடு முழுவதும் பரவி உள்ளது.
மத்திய - மாநில அரசை விடாத திருமாவளவன்! மது ஒழிப்பு மாநாட்டில் 12 தீர்மானம் நிறைவேற்றம்.. முழு விபரம்
இதனால் இந்த விவகாரத்தை அகில இந்திய பிரச்சனையாக எடுத்து மத்திய அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றினால் அதன் மூலம் தான் பலன் கிடைக்கும். தமிழ்நாட்டில் இன்றைக்கு மதுவிலக்கு அமல்படுத்தினால் 70க்கு முன்பு இருந்தது போல் பாண்டிச்சேரிக்கு செல்வார்கள். ஆந்திரா, கேரளா, கர்நாடகா செல்லும் நிலை இருக்கும். அப்படியான சூழல் இருக்க கூடாது. நாடு முழுவதும் இந்த போதைப்பொருள் விளைவிக்கும் தீமைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டும். சாதாரணமாக நம்ம ஊர்களில் ஒன்றை சொல்வார்கள். குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பார்கள். நம்மை பேச்சை கேவலப்படுத்தும் வாசமாக இது உள்ளது. இதனை மாற்ற மது விலக்குக்கு என்று மத்திய அரசு அகில இந்திய அளவில் சட்டம் கொண்டு வர வேண்டும்’’ என்றார்.













Click it and Unblock the Notifications