தொகுதி மறுசீரமைப்பு நடந்தால்.. சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக மாறுவோம்.. முக ஸ்டாலின் பேச்சு!
சென்னை: சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு 29 மாநிலங்களுக்கு தமிழக அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இதுவரை 24 மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் உட்பட ஏராளமான தலைவர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை அளித்தார்.

இதன்பின் தொடங்கிய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அனைவரும் ஓரணியில் திரண்டிருக்கும் என்பதை இந்தியாவுக்கு உணர்த்துவதாக உங்களின் வருகை அமைந்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் தனித்தன்மையுடன் உள்ளது. மொழிகள், பண்பாடுகள், கலாச்சாரத்தை கொண்டதே இந்தியா. மாநிலங்கள் சுயாட்சியுடன் ஈடுபட்டாலே இந்தியாவில் கூட்டாட்சி உருவாக முடியும்.
இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கிய நாளாக இந்த நாள் அமையப் போகிறது. மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது மாநிலங்களை பாதிக்கப் போகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய நம்மை போன்ற மாநிலங்கள், நாடாளுமன்றத் தொகுதிகளில் பிரதிநிதிகளை இழக்க நேரிடும். இதனால் நாம் எதிர்க்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.
தற்போதைய மக்கள் தொகை தொகுதி மறுசீரமைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் மக்கள் தொகை கட்டுப்பாட்டின் மூலம் முன்னேற்றத்தை காட்டியுள்ளன. இத்தகைய மாநிலங்களை கண்டிப்பதாக தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை இருக்கப் போகிறது. மக்கள் பிரதிநிதிகளை குறைவதன் மூலமாக நமது எண்ணங்களை சொல்வதற்கான வலிமை குறைகிறது.
2 ஆண்டு காலமாக மணிப்பூர் மாநில பற்றி எரிகிறது. இதனால் நீதிக்கான அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஏனென்றால் நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. எனவே, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது அல்லது பிரதிநிதித்துவம் குறைவது என்பது அரசியல் வலிமை குறைவதாகவே பார்க்க வேண்டும்.
இது வெறும் எண்ணிக்கை பற்றியது அல்ல. இது நமது அதிகாரம். நமது உரிமைகள், எதிர்கால நலனை பற்றியது. பிரதிநிதிகள் குறைந்தால் நமது மாநிலங்கள் தேவையான நிதியை பெறுவதற்கு கூட போராட வேண்டிய சூழல் வரும். விருப்பமில்லாமல் சட்டங்கள் வடிவமைக்கப்படும். நம் மக்களை பாதிக்கும் முடிவுகள், நம்மை பற்றி அறியாதவர்களால் எடுக்கப்படும்.
பெண்கள் அதிகாரம் பெறுவதில் பின்னடைவை சந்திப்பார்கள். மாணவர்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். காலம் காலமாக காக்கப்படும் சமூகநீதி பாதிக்கப்படும். சொந்த நாட்டில் அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் ஏற்படும். இதனால் தொகுதி மறுசீரமைப்பை சாதாரணமாக கருதக் கூடாது. இந்த போராட்டம் மறுசீரமைப்புக்கு எதிரானது அல்ல.
இந்த போராட்டம் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்துகிறது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாடு 8 இடங்களை இழக்கும். நாடாளுமன்றத்தில் மொத்த எண்ணிக்கை அதிகரித்தால், தமிழ்நாடு 12 இடங்களை இழக்க நேரிடும் என்று கூறினேன்.
இதற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா, தென் மாநிலங்கள் விகிதாச்சார அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை இழக்காது என்று கூறினார். அவரின் விளக்கம் குழப்பமானதாக உள்ளது. ஏனென்றால் 2023ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய வந்த மோடி, தொகுதி மறுசீரமைப்பு நடக்கவிருக்கிறது. காங்கிரஸ் சொல்வதை போல் மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு நடந்தால், 100 தொகுதிகளை தென் மாநிலங்கள் இழக்க நேரிடும். இதன் மூலமாக தொகுதிகள் குறையும் என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
எப்போதும் மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாக பாஜக உள்ளது. அவர்கள் தனது உள்நோக்கத்தை தொகுதி மறுசீரமைப்பில் செய்ய நினைக்கிறார்கள். இதனை எந்த மாநிலமும் அனுமதிக்கக் கூடாது. இந்த அச்சுறுத்தலை உணர்ந்து முன்னெப்போதும் இல்லாத ஒற்றுமையுடன் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. இதே ஒற்றுமையை அனைத்து மாநிலங்களும் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications