பர்னிச்சரை போட்டுடைத்த ஜெயக்குமார்.. கொந்தளித்த பாட்டாளிகள்! அதிமுக கூட்டணியிலிருந்து விலகும் பாமக?
சென்னை : அதிமுக பாமக இடையிலான மோதல் அதிகரித்திருக்கும் நிலையில், அந்தக் கட்சியுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடராது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள் அதே நேரத்தில் வேறு சில கட்சிகளை கொண்டு வருவதற்காகவே கூட்டணியில் இருந்து பாமகவை வெளியேற்றும் நடவடிக்கைகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதிமுகவுக்குள் தான் அதிகார பிரச்சனை என்றால் அந்தக் கட்சி கூட்டணி தொடர்பாகவும் அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி வருகிறது பாமக பாஜக தவிர சொல்லிக் கொள்ளும்படி அந்த கூட்டணியில் வேறு கட்சிகள் இல்லை.
புதிய நீதி கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் மூப்பனார் உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும் தமிழக அளவில் பிரபலமான வேறு கட்சிகள் இல்லாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார்

அதிமுக கூட்டணி
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாமக்கல்லில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய எடப்பாடி அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என எந்த நேரத்தில் கூறினாரோ தெரியவில்லை அப்போதிருந்தே கூட்டணிக்குள் பல்வேறு சலசலப்புகள் எழுந்து வருகிறது. குறிப்பாக பாஜக தலைமை எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கைகளால் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒன்றிணைவதோடு பலமான கூட்டணி அமைத்தால் தான் குறிப்பிடத் தகுந்த இடங்களை கைப்பற்ற முடியும் என அந்த கட்சி விரும்புகிறது.

கூட்டணியில் மோதல்
அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க அக்கட்சி திட்டமிட்டது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வேறு வகையில் சிந்தித்து வருகிறார் ஓபிஎஸ் சசிகலா ஆகியோர் இல்லாமல் தனது தலைமையில் புதிய கூட்டணி அமைப்பதற்காக அவர் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தல்களில் பாஜகவால் தான் தோல்வியை சந்தித்தோம் என பல முன்னாள் அமைச்சர்கள் கூறியதால் இந்த முறை சிறுபான்மையினர் மற்றும் நடுநிலை வாக்காளர்களை கவரும் வகையில் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருகிறது.

கட்சிகள் அதிருப்தி
ஏற்கனவே திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் எடப்பாடியின் புதிய கூட்டணி சாத்தியம் தான் என அரசியல் நிபுணர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் பாஜக இருக்கும் கூட்டணிக்கு காங்கிரஸ் எக்காரணத்தைக் கொண்டும் வராது. அதே நேரத்தில் பாமக இருக்கும் கூட்டணிக்கு நாங்கள் வரமாட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் ஏற்கனவே கூறியிருக்கிறார். இதன் காரணமாக புதிய கூட்டணிக்கு அச்சாரம் போடும் வகையிலேயே பாமக அதிமுக மோதல் இருக்கிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

அன்புமணி ராமதாஸ்
இதனிடையே அன்புமணி ராமதாஸ் நன்றியை மறந்து பேசக்கூடாது என ஜெயக்குமார் பேசியது அதன் வெளிப்பாடாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. காரணம் பாமகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என திமுக விரும்புவதாக சில தகவல்கள் உலாவுகின்றன. கடந்த சில நாட்களாக அன்புமணி ராமதாஸ் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரின் பேச்சுகளிலும் அறிக்கைகளிலும் எதிர்ப்பு தொனி இல்லாமல் சாப்ட் கார்னர் அரசியலே இருக்கிறது. இதனால் பாமக திமுகவுடன் கூட்டணி சேர்வதற்கு தயாராகி வருவதாகவும் அதனால் தான் கடந்த காலங்களில் அதிமுகவை விமர்சிப்பதை போல தற்போது அன்புமணி விமர்சித்து வருவதாகவும் இதன் காரணமாகவே பாமகவை ஜெயக்குமார் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றார் என்கின்றனர்.

கைகொடுக்குமா?
மேலும் வரும் காலங்களில் இந்த மோதல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் மூலம் பாஜகவுடன் மோதல் போக்கை கையாண்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி தற்போது பாமக உடனும் மோதல் போக்கை கையாண்டு வருவது அதிமுகவினரையே குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எடப்பாடி வியூகம் தான் என்ன? எப்படி நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க போகிறோம்? என்பது அவர்களின் கவலையாக இருக்கிறது. எடப்பாடி புதிய கூட்டணி கனவு பலிக்குமா அவரது அரசியல் வியூகங்கள் களத்தில் கை கொடுக்குமா என்பதை காலமும் மக்களும் தான் முடிவு செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications