சார்.. இங்க இருந்த ஒரு ரோட்டையே காணோம் சார்.. சென்னை போலீசில் பரபரப்பு புகார்
சென்னை: "இங்கே இருந்த கிணற்றைக் காணோம்.." என்று நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில், கூறுவதை போல ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
மடிப்பாக்கம் பஜார் சாலையில் இருந்து, ஜே.கே., சாலை செல்லும் வழித்தடத்தை காணவில்லை என பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்பு வாசிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
மனைவியைதான் விவாகரத்து செய்ய முடியும்.. குழந்தைகளை அல்ல.. 4 கோடி கொடுங்க: உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னை மடிப்பாக்கம், பஜார் சாலையை ஒட்டியுள்ளவை பகீரதி நகர், ஸ்ரீனிவாசா நகர். அங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தனியார் பள்ளி ஒன்றும் உள்ளது.
வழித்தடம் இருந்தது
பாகீரதி நகருக்கான 'லேஅவுட்', 1973ல் தயாரான போது, பஜார் சாலையில் இருந்து ஜே.கே., சாலைக்கு வழித்தடம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தை பகுதிவாசிகளும் பயன்படுத்தி வந்தனர்.
தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பஜார் சாலையில் இருந்து ஜே.கே., சாலை செல்லும் பிரதான வழித்தடத்தை பட்டா இடம் என்று கூறி தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது தனியாரின் ஆக்கிரமிப்பில் உள்ளது.
மக்கள் அவஸ்தை
இதுகுறித்த புகாரின் படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றி கொடுத்தனர். அடுத்த சில மாதங்களில் மீண்டும் அந்த வழித்தடம் அடைக்கப்பட்டு விட்டது. அன்றையில் இருந்து தொடர்ந்து போராடி வரும் பகுதிமக்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், சாலை இருந்ததற்கான ஆதாரங்களை சேகரித்தனர்.
தாசில்தாரிடம் போன புகார்
அடுத்த கட்டமாக, சோழிங்கநல்லுார் தாசில்தாரிடம் முறையிட்டனர். சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு வருவாய் துறை வாயிலாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் பிறகும் இப்பிரச்னை கிடப்பில் உள்ளது.
போலீஸ் விசாரணை
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகள் சார்பில் இன்று, வழித்தடத்தை காணவில்லை எனவும், அதனை மீட்டுத் தரும்படியும் மடிப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றை காணோம்
ஒரு திரைப்படத்தில், வட்ட கிணறு வத்தாத கிணறு இங்கே இருந்தது, இப்போது அந்த கிணற்றை காணோம். கிணறு வெட்டிய ரசீது கூட என்னிடத்தில் இருக்கிறது என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடிகர் வடிவேலு புகார் கொடுப்பார். காவல்துறையினர் நேரில் வந்து பார்த்தபோது அங்கே கிணறு இருந்ததற்கான அடையாளமே இருக்காது. இன்ஸ்பெக்டர் தனது வேலையை விட்டு ராஜினாமா செய்துவிடுவார். இப்படியான காட்சிகளை சினிமாவில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், உண்மையாக வழித்தடமே மாயமாகியுள்ள சம்பவம், அங்கே வசிக்கும் மக்களிலேயே வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது