3 நாட்களில் குணமடையும் காய்ச்சலுக்கு ஏன் பள்ளிகளுக்கு விடுமுறை தேவை? மா.சு. கேள்வி
சென்னை : தமிழகத்தில் இன்புளூயன்ஸா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அவசியம் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி, இருமல் என குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் வைரஸ் தொற்று மேலும் தீவிரமடையாமல் இருக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
தமிழகத்தில் இன்புளூயன்ஸா காய்ச்சல் பரவிவரும் சுழலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

விளக்கிய மா.சுப்பிரமணியன்
சென்னை பள்ளிகளுக்கான இலச்சினை மற்றும் குறும்படம் வெளியிடுதல் நிகழ்ச்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் இலச்சினை மற்றும் குறும்படத்தை வெளியிட்டு பரிசுகள் வழங்கினர். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் தீவிரமாகப் பரவி வரும் இன்புளூயன்சா காய்ச்சல் குறித்து விளக்கம் அளித்தார்.

3 நாட்களில் சரியாகிவிடும்
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "பள்ளிகளுக்கு விடுமுறை அளியுங்கள் என 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளனர். இந்த காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகிவிடும். எனவே பதற்றமடைய வேண்டிய அவசியம் இல்லை. 3 நாட்களில் சரி ஆகிவிடும் காய்ச்சலுக்கு எப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது?

விடுமுறை அவசியமில்லை
குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தால், முதலில் நிற்பது அரசு தான். பெற்றோர்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, காய்ச்சல் சரியாகும் வரை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் எழவில்லை.

இதுவரை இன்புளூயன்சா
தமிழகம் முழுவதும் ஜனவரி முதல் 1,166 நபர்கள் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 371 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 வயதுக்குட்பட்ட 46 குழந்தைகளுக்கும், 5 -14 வயதுக்குட்பட்ட 60 குழந்தைகளுக்கும், 14 - 60 வயதுடையவர்கள் 194 பேருக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட 71 பேருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

பதட்டம் ஏற்படுத்த வேண்டாம்
இவர்களில் 15 நபர்கள் அரசு மருத்துவமனைகளில் உள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 260 பேரும், 96 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 10 மாதங்களில் 10 நபர்கள் இந்த நோயால் இறந்துள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டிய நிலை இல்லை. தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதட்ட நிலையை உருவாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications