மீண்டும் களைகட்டும் மாமல்லபுரம்- ஆக. 13 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு சர்வதேச காற்றாடி திருவிழா!
சென்னை : மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைந்த நிலையில், வரும் 13 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு சர்வதேச காற்றாடி திருவிழா நடைபெறவுள்ளது. இதனால் மாமல்லபுரம் மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்து, தமிழக அரசு அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்தது.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் மு.க.அழகிரி மகன்! அண்ணன் தம்பி சந்திப்பு எப்போது? களைகட்டும் மதுரை!
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்
186 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகளுக்கும் தங்கும் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து, அவரவர் நாட்டு உணவுகளை சமைத்து கொடுத்து சிறப்பாக உபசரித்தது. சர்வதேச வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் தமிழக அரசின் ஏற்பாடுகளையும், உபசரிப்பையும் புகழ்ந்து தள்ளினர். தொடக்க விழாவை போலவே நிறைவு விழாவையும் மிக பிரம்மாண்டமாக சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடத்தி தமிழக அரசு அசத்தியது. இதனால் சர்வதேசமே தமிழகத்தை உற்று நோக்கியுள்ளது.
சர்வதேச காற்றாடி திருவிழா
இந்நிலையில், மாமல்லபுரம் மீண்டும் களைகட்ட உள்ளது. சர்வதேச காற்றாடி திருவிழா, சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் நடத்தப்பட உள்ளது. இத்திருவிழா வரும் 13ம் தேதி தொடங்கி, 15ம் தேதி வரை 3 நாட்களுக்கு கோலாகலமாக நடைப்பெற உள்ளது. வழக்கமாக, காற்றாடி திருவிழா, குஜராத், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களிலேயே நடத்தப்பட்டு வந்தது. செஸ் ஒலிம்பியாட்டியை வெற்றிகரமாக தமிழக அரசு நடத்தியதால், தற்போது முதல்முறையாக சர்வதேச காற்றாடி திருவிழாவும் தமிழகத்தில் நடைபெறவுள்ளது.
100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு குழுக்கள்
இந்த பிரமாண்ட காற்றாடி திருவிழா14 ஏக்கர் பரப்பளவில் மகாபலிபுரத்தில் உள்ள TTDC ஓஷன் வியூவில் நடைபெறுகிறது. அமெரிக்கா, தாய்லாந்து, மலேஷியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுக் குழுக்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளது. பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட ஆயிரக்கணக்கான அழகான காற்றாடிகள் திறந்த வெளியில் பறக்க உள்ளன.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
இந்நிகழ்ச்சியில் பல்வேறு உணவுக் கடைகள், விளையாட்டுகள், பட்டம் தயாரிப்பது குறித்த பட்டறைகள், குழந்தைகளுக்கான போட்டிகள் மற்றும் மாலையில் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளன. இந்நிகழ்வில் பங்கேற்க குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் இல்லை. பெரியவர்களுக்கான நுழைவு கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.செஸ் ஒலிம்பியாட் போட்டியால் மாமல்லபுரம் திருவிழாகோலம் பூண்ட நிலையில், தற்போது, வரும் 13 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு சர்வதேச காற்றாடி திருவிழா நடைபெறவுள்ளது. இதனால் மாமல்லபுரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளது.