ராவணன் தலை போல்.. மீண்டும் மீண்டும் பரவும் அந்தரங்க வீடியோக்கள்.. சென்னை உயர்நீதிமன்றம் கவலை!
சென்னை: ராமாயணத்தில் வரும் ராவணன் தலை வெட்டப்பட்ட பின் மீண்டும் மீண்டும் முளைப்பது போல், அந்தரங்க வீடியோக்கள் இணையதளங்களில் பரவி வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
இணையதளங்களில் பகிரப்பட்ட தனது அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை அகற்றக் கோரி பெண் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், கல்லூரி படித்த போது, ஆண் நண்பருடன் காதல் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்வதாக அவர் உறுதி அளித்ததை நம்பி அவருடன் நெருக்கமாக இருந்தேன்.

நாங்கள் நெருக்கமாக இருந்ததை, எனது காதலன் தனது செல்ஃபோனில் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோவும், புகைப்படங்களும், இணையதளங்கள், ஆபாச வலைதளங்கள், சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. இதுகுறித்து என் நண்பர் சொன்ன பின்னர் தான், நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து, அவற்றை இணையதளங்களில் காதலன் பதிவேற்றியது தெரிந்தது.
இதனால் சோசியல் மீடியா, இணையதளங்கள், ஆபாச தளங்களில் பரவி வரும் இந்த வீடியோக்களை நீக்கவும், எதிர்காலத்தில் மீண்டும் பரவாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜூன் 18ல் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தமிழக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளேன். அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை இணையதளத்தில் இருந்து 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை மீண்டும் இன்று வந்தது. அப்போதும் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், வீடியோக்கல் மேலும் 13 தளங்கள் இருப்பதாக கூறினார்.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள், நேரடியாக தங்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றுவது தொடர்பாக எளிதாக அணுகும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வருவதால் வழக்கு விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமாயணத்தில் ராவணனின் தலை ஒவ்வொரு முறை வெட்டப்படும் போது மீண்டும் மீண்டும் முளைப்பது போல், மீண்டும் மீண்டும் அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது என்று கவலை தெரிவித்ததோடு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சட்டவிரோத இணையதளங்களை முடக்கியதை போல் ஆபாச இணையதளங்களையும் முடக்க வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 19ஆம் தேதி ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications