குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி! நெதன்யாகு லேசுபட்ட ஆள் கிடையாது!
இஸ்லாமாபாத்: ஈரான்-அமெரிக்கா இடையே ஏற்பட்டிருக்கும் போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற இருக்கும் நிலையில், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்பட்டால்தான் பேச்சுவார்த்தை நடக்கும் என ஈரான் கூறியிருக்கிறது.
போர் நிறுத்தம் காரணமாக, ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ஈரான் மீதான தாக்குதலை மட்டும் நிறுத்தினால் போதாது, லெபனான் மீதான அட்டாக்கையும் நிறுத்த வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. ஈரானின் இந்த டிமாண்ட், பேச்சுவார்த்தையை மேலும் தாமதப்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

நெதன்யாகுவின் ஆட்டம்
ஈரான் போருக்கு அமெரிக்கா ஒரு காரணம் எனில், மற்றொரு முக்கிய காரணம் இஸ்ரேல். ஈரானை வழிக்கு கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது எனில்.. இஸ்ரேல், ஈரானை மொத்தமாக காலி செய்ய பிளான் செய்திருக்கிறது. எனவே ஈரான் மட்டுமல்லாது, அதன் ஆதரவு படைகள் உள்ள லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படி இருக்கையில், தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்தம், லெபனானுக்கும் விரிவடைய வேண்டும் என்று ஈரான் விருப்பம் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்க தூதுக்குழு
அமைதி பேச்சுவார்த்தைக்காக, இஸ்லாமாபாத்தில் அமெரிக்க தூதுக்குழு வந்திருக்கிறது. இதில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ், சிறப்பு தூதர் விட் காஃப், ஜாரெட் குஷ்னர் உள்ளிட்டோர் வந்திருக்கின்றனர். அவர்கள் வருவதற்கு முன்னரே, அமெரிக்க சிஐஏ அதிகாரிகள் குழு இஸ்லாமாபாத்துக்கு வந்து நிலைமையை சரிபார்த்து, பாதுகாப்பை உறுதி செய்திருந்தது. இதனை தொடர்ந்து, ஈரானிலிருந்து பேச்சுவார்த்தை குழுவும் பாகிஸ்தான் வந்திருக்கிறது.
ஈரானின் டிமாண்ட்
பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. ஈரான் குழுவில் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாபர் காலிபாப், வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்கின்றனர். பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்னர் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.
லெபனான் போர்
ஈரானின் அரசு ஊடகமான 'பிரஸ் டிவி' இந்த டிமாண்டை உறுதி செய்திருக்கிறது. பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் எனில், நெதன்யாகு அமைதியாக இருக்க வேண்டும். லெபனான் மீதான தாக்குதலுக்கு தனது படைகளுக்கு உத்தரவிடக்கூடாது என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை லெபனான் தலைநகர் பெய்ரூட் மீதான தாக்குதல் தொடரும் எனில், நாங்கள் உடனடியாக பேச்சுவார்த்தையை கைவிட்டு வெளியேறுவோம் என்று ஈரான் வார்னிங் கொடுத்திருக்கிறது.
இஸ்ரேலின் பிடிவாதம்
இந்த விஷயம் தொடர்பாக, அமெரிக்கா இஸ்ரேலிடம் பேசியிருக்கிறது. இருப்பினும், இன்னும் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தாக்குதல்களும் நிறுத்தப்படவில்லை. எனவே, பேச்சுவார்த்தை தொடங்கப்படாமல் இருக்கிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை பொறுத்தவரை, இந்த ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்தத்தில், லெபானானை சேர்க்க கூடாது என்று சொல்லி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தை அமைதியாக போக வேண்டும் எனில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சர்வதேச சட்டங்களை மதித்து பெய்ரூட் தாக்குதலை நிறுத்த வேண்டும். இல்லையெனில் மீண்டும் உலகம் மற்றொரு எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும். அதற்கு முழு காரணமும் நெதன்யாகுவாகத்தான் இருப்பார்.












Click it and Unblock the Notifications