இர்பான் கொண்டு வந்த சிக்கல்! சென்னை தனியார் மருத்துவமனைக்கு அபராதம்.. 10 நாள் மருத்துவம் பார்க்க தடை
சென்னை: குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றி யூடியூபர் இர்ஃபான் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இந்த விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்ட அனுமதித்த சென்னை தனியார் மருத்துவமனைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, 10 நாட்கள் மருத்துவம் பார்க்க தடை விதித்து ஊரக மருத்துவ நலப்பணிகள் இயக்ககம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பிரபல யூடியூபராக இருப்பர் இர்ஃபான். இவர் ஹோட்டல்களுக்கு சென்று அங்குள்ள உணவுகளை சுவைத்து அதுதொடர்பான வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டு வருகிறார். சமீபகாலமாக இர்ஃபான் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதற்கு முக்கிய காரணம் அவர் வெளியிடும் வீடியோக்கள் தான்.

தற்போதைய காலத்தில் யூடியூபர்களாக இருக்கும் பலரும் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயங்களை வீடியோக்களாக்கி பதிவு செய்து வருகின்றனர். இதற்கு யூடியூபர் இர்ஃபானும் விதிவிலக்கல்ல.
அந்த வகையில் தான் யூடியூபர் இர்பான் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இர்ஃபானுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவரது மனைவி பெயர் ஆசிஃபா. இவர் கர்ப்பிணியாக இருந்தார். நம்நாட்டை பொறுத்தவரை கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய தடை உள்ளது. ஆனால் இர்ஃபான் தனது மனைவியை வெளிநாடு அழைத்து சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பரிசோதனை மூலம் கண்டறிந்ததோடு, அதனை வீடியோவாக வெளியிட்டு சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார்.
அதன்பிறகு சில மாதங்கள் அமைதியாக இருந்த இர்ஃபான் தற்போது மீண்டும் அடுத்த சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது இர்ஃபான் ஆசிஃபா தம்பதிக்கு கடந்த ஜூலைமாதம் பெண் குழந்தை பிறந்தது. சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபோது தாய்க்கும், குழந்தைக்கும் இடையே தொப்புள்கொடி இருந்தது. இந்த தொப்புள்கொடியை டாக்டர்கள் தான் துண்டிப்பார்கள். ஆனால் பிரசவ அறையில் இருந்த இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டினார்.
பொதுவாக பிரசவ வார்டில் இருக்கும்போது டாக்டர் உள்பட அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கு தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு உடை, முகக்கவசம், கையுறை அணிந்து இருப்பார்கள். ஆனால் இர்ஃபான் இதுபோன்ற பாதுகாப்புகள் எதுவும் இன்றி தொப்புள்கொடியை வெட்டியுள்ளார். அதோடு அதனை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ சர்ச்சையானது.
இதையடுத்து இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மேலும் இதுபற்றி ஊரக மருத்துவ நலப்பணிகள் இயக்ககம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் குழந்தையின் தொப்புள்கொடியை வெட்ட அனுமதித்த தனியார் மருத்துவமனை மீது முதற்கட்ட நடவடிக்கை என்பது எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சோழிங்கநல்லூரில் செயல்படும் தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் 10 நாட்கள் மருத்துவம் பார்க்க தடை விதிக்கப்பட்டு உத்தரவிட்டுள்ளது.
அதோடு தற்போது மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கலாம். மாறாக புதிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதுதவிர குழந்தையின் தொப்புள்கொடியை வெட்ட அனுமதியளித்த டாக்டர் மற்றும் இர்ஃபான் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்பது மேற்கொள்ளப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications