நாளையுடன் முடிகிறது அவகாசம்.. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைந்துள்ளதா? செக் பண்ணுவது எப்படி?
சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31-ம் தேதி அதாவது நாளை தான் கடைசி நாளாகும். இந்த நிலையில், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை நுகர்வோர்கள் எப்படி தெரிந்துகொள்வது என்பதற்காக புது வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன.
இதில் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது தவிர விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
பேராபத்து.. கடலூரும் அரியலூரும் அழிந்தே விடுமாம்! 2 லட்சம் குடும்பத்தின் கதி - அப்படி என்ன திட்டம்?
ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
இந்த சூழலில், மின் நுகர்வோர்கள் குறித்த முறையான டேட்டாவை பெறும் வகையில், மின் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த அறிவிப்பு மின்சார வாரியம் தரப்பில் வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது. ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டது.
நாளை கடைசி நாள்
பண்டிகை நாட்கள் தவிர ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனினும் இந்த காலக்கெடுவிற்கும் ஏராளமானவர்கள் மின் இணைப்பு எண்ணை இணைக்காததால் இதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.
ஆதார் எண்ணை இணைக்க 'லிங்க்'
இதன்படி ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறப்பு முகாம்கள் மட்டும் இன்றி இணையதளம் மூலமாகவும் ஆதார் எண்ணை இணைக்கும் வசதியை மின்சார வாரியம் செய்து இருந்தது. https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள முகவரியை அறிமுகம் செய்த மின்சார வாரியம் அதில் பயனாளர்கள் குறிப்பிட்ட ஆவணங்களை அப்லோடு செய்து ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தது.
40 லட்சம் பேர் இணைக்கவில்லை
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இன்னும் சுமார் 40 லட்சம் பேர் இணைக்காததால் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. கண்டிப்பாக மீதமுள்ள பயனாளிகளும் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்று மின்சார வாரிய அதிகாரிகள் சொல்லும் கருத்தாக உள்ளது.
எப்படி செக் பண்ணுவது?
இதனிடையே, தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை நுகர்வோர்கள் சரிபார்த்துக்கொள்ளும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை பதிவிட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மின் இணைப்பு எண் மற்றும் ஏற்கனவே கொடுத்து இருந்த மொபைல் எண்ணை பதிவிட்டு சப்மிட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு நமது மின் இணைப்பு எண் விவரங்கள் காட்டப்படும். இடது பக்கமாக கடைசியில் ஆதார் Updated என்ற விவரமும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆதார் எண் அப்டேட் ஆகவில்லை என்றால் உடனடியாக அப்டேட் செய்து கொள்ள ஏதுவாக இந்த வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளதாக தெரிகிறது.