வேட்டை ஸ்டார்ட்... இரவோடு இரவாக.. எடப்பாடி பழனிசாமி வீட்டில் நுழைந்த "தலை".. இங்கே "அவர்" வர்றாரா?
சென்னை: எம்பி தேர்தல் நெருங்கி வரும்நிலையில், அதிமுகவின் வேகங்கள் கூடிவருகின்றன.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வியூகங்களும் தயாராகி வருகின்றன.
திமுகவை பொறுத்தவரை, எப்போதுமே சிறுபான்மையினர் ஓட்டுக்களை தன்னகத்தே வலுவாக வைத்து கொண்டிருக்கிறது.. அதேபோல, அதிமுகவை பொறுத்தவரை, பெண்களின் வாக்கு வங்கியை தன்னகத்தே வலுவாக வைத்து கொண்டிருக்கிறது.

திமுக பலம்: ஆனால், எப்படி பார்த்தாலும், எம்ஜிஆர் காலம் முதல் இப்போது வரை, திமுகவைவிட, அதிக வாக்கு வங்கியையே பெற்றிருப்பது அதிமுகதான் அப்படியிருந்தும்கூட, கடந்த முறை ஆட்சியை தவறவிட்டது.. இத்தனைக்கும் ஒருங்கிணைந்த அதிமுகவாக அப்போது போட்டியிட்டும் தோல்வியை சந்தித்தனர்.
கடந்த 2001ல் வெறும் 31.4 சதவீத ஓட்டுகளுடன் 132 இடங்களில் வென்றுஆட்சியை பிடித்தது. 2011ல் 38.4 சதவீத ஓட்டுகளுடன், 150 இடங்களை பிடித்தது.. 2016ல், 40.8 சதவீத ஓட்டுகளுடன், 136 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. 2019 -ல் 18 சதவீத ஓட்டு மட்டுமே பெற்றது என்றாலும், 2021 சட்டசபை தேர்தலில், 34.24 சதவீதமாக உயர்த்திக் காட்டியது என்றாலும், ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
தேர்தல் தோல்வி: பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் அதிமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணம் என்றார்கள்.. அதேபோல, திமுக அளவுக்கு, அதிமுகவுக்கு மெகா கூட்டணி அமையவில்லை என்றார்கள்.. முக்கியமாக, விஜயகாந்த்தை கூட்டணியில் மிஸ் பண்ணியிருக்க கூடாது என்றும், அமமுகவையாவது கூட்டணியில் சேர்த்திருக்கலாம் என்றும் கருத்துக்கள் வலம் வந்தபடியே இருந்தன. இதன் தாக்கம், நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலிலும் தென்பட்டது. அதிமுகவின் கோட்டையான கொங்குவிலும் சரிவை கண்டது.
இதற்கு பிறகு, அதிமுக உட்கட்சி பிரச்சனையை தாண்டி விழித்து கொண்டது.. இழந்துபோன ஓட்டுவங்கியை பெற்றாக வேண்டும் என்ற முனைப்பையும் காட்டி வருகிறது..
கூட்டணி பலம்: இதற்காகவே, கூட்டணியிலிருந்து பாஜகவை கழட்டியும் விட்டது.. ஓவைசி கட்சி, தமீமுன் அன்சாரி உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவையும் தற்போது பெற்றிருக்கிறது. ஆனால், எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயக கட்சிகள் அதிமுக கூட்டணியில் பகிரங்கமாக சேரவில்லை..
இப்படிப்பட்ட சூழலில், வலுவான கூட்டணி எதுவும் இப்போதுவரை அமையவில்லை.. அதனால்தான், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். நேற்றுகூட அதிமுகவின் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.. பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது, கட்சி பணிகளை தீவிரப்படுத்துவது என பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.
வேட்பாளர்கள்: அதேபோல, தொகுதிகள் தேர்வு, வேட்பாளர்கள் தேர்வு போன்றவையும் ரகசியமாக நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாராம்.. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதுதொடர்பாக வெளிப்படையாக பேசாமல், திருவாரூர், விருதுநகர் ஆகிய 2 மாவட்ட செயலாளர்களை மட்டும், தன்னுடைய வீட்டுக்கு மாலையில் வரவழைத்து பேசினாராம் எடப்பாடி பழனிசாமி.
காரணம், இந்த மாவட்டங்களில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக பிரச்சனைகள் இருப்பதால், அதையெல்லாம் உடனே தீர்க்கும்படி அட்வைஸ் செய்து அனுப்பியிருக்கிறாம். அவர்கள் சென்றபிறகு, அதே நாளில் இரவு 8 மணிக்கு, கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்பி வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் போன்ற சீனியர்கள் வந்துள்ளார்கள்.. இவர்களுடனும் ஆலோசனை நடத்தினாராம் எடப்பாடி...
பாமக கூட்டணி: எம்பி தேர்தல் குறித்து, நள்ளிரவு 11.30 மணி வரை இந்த ஆலோசனை நடந்துள்ளது.. அப்போது, பாமக, தேமுதிக கட்சிகளை மறுபடியும் கூட்டணியில் சேர்ப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டதாம்.
பாமக அதிமுகவில் கூட்டணி வைப்பது குறித்து ஏற்கனவே அரசல் புரசலான செய்திகள் கசிந்தன என்றாலும், உறுதியான தகவல் தெரியவில்லை.. விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, தேமுதிகவுடன் பாஜக நெருக்கம் காட்டி வருவதுடன், தேமுதிகவின் ஓட்டுக்களையும் கணக்கிலெடுப்பதாக தெரிகிறது. எனவே, தேமுதிக பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.. எனவே, அதிமுகவுடன் கூட்டணி வைக்க போவது யார் என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications