பதவி கிடைக்கலையே..உங்களுக்கும் என் நிலைமை தானா சார்? திமுக ஆர்எஸ் பாரதி பற்றி காயத்ரி ரகுராம் ட்விட்
சென்னை: ‛‛எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எம்எல்ஏ, எம்பி ஆகிவிட்டனர். ஒரே கொடி, ஒரே கட்சி என இருந்ததால் பதவி கிடைக்கவில்லை. கட்சிக்கு உழைக்காதவர்கள் பதவியில் உள்ளனர்'' என மேடையில் திமுகவின் ஆர்எஸ் பாரதி பேசிய நிலையில் அதுபற்றி பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் கேட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றியது. திமுக தலைவரான முக ஸ்டாலின் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதில் கவனம் செலுத்தும் வகையில் திமுக சார்பில் வியூகங்கள் வகுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்! காயத்ரி ரகுராமுக்கு கல்தா! இவருக்கா அந்த பதவி? அதிரடி காட்டிய அண்ணாமலை!
ஆர்எஸ் பாரதி பேச்சு
இந்நிலையில் சென்னை ஆர்எஸ் புரத்தில் நடந்த நிகழ்ச்சியின் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்எஸ் பாரதி பேசினார். அப்போது அவர், ‛‛எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்எல்ஏ, எம்பி ஆகிவிட்டனர். ஒரே கொடி, ஒரே கட்சி என இருந்ததால் பதவி கிடைக்கவில்லை. உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்காத நிலையில் உழைக்காதவர்கள் பதவியில் அமர்ந்துள்ளனர். கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதாக பதவி கிடைக்காது; அதை ஜீரணித்துக் கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும்'' என பேசினார்.
காரணம் என்ன?
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கு சட்டசபை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாகவும் உடன்பிறப்புகள் மத்தியில் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனை வெளிக்காட்டும் வகையில் தான் மூத்த தலைவரான ஆர்எஸ் பாரதி மேடையில் பேசி ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
காயத்ரி ரகுராம் கருத்து
இதனால் ஆர்எஸ் பாரதியின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு அரசியல் பிரபலங்கள், அரசியல் விமர்சகர்கள், நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பாஜகவில் இருந்து 6 மாதம் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்எஸ் பாரதியின் பேச்சு பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
காயத்ரி ரகுராம் கூறிது என்ன?
இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள தனது பதிவில், ‛‛என்ன ஆர்எஸ் பாரதி சார் வெளிப்படையாக விமர்சித்து கருத்தும் கூறினீர்கள். உங்கள் திமுக கட்சிக்கு களங்கம் கொண்டு வரலாமா? உள்கட்சியின் பிரச்சினை சார். நீங்கள் வெளியே பேச முடியாது. உங்களுக்கும் என் நிலைமை தானா என்று பார்ப்போம்'' என கூறியுள்ளார்.
பாஜகவில் நீக்கப்பட்ட காயத்ரி
காயத்ரி ரகுராம் தமிழக பாஜவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தார். இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறுவதாக கூறி சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரை 6 மாதம் வரை சஸ்பெண்ட் செய்தார். இந்நிலையில் தான் பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில வளர்ச்சி பிரிவின் தலைவராக இசையமைப்பாளர் தீனா நேற்று நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.