காங்கிரஸ் கட்சியில் ஜாதிய மனோ பாவம்? தலித்களுக்கு அரசியல் அதிகாரம்! ரஞ்சன் குமார் கூறுவது என்ன?
சென்னை: காங்கிரஸ் கட்சியில் ஜாதிய மனோபாவம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அக்கட்சியின் தமிழக எஸ்.சி.பிரிவுத் தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.
மல்லிகார்ஜுன் கார்கே காங்கிரஸ் தலைவராக உள்ள சூழலில் 'இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை' என்கிற வகையில் தலித் சொந்தங்களை கட்சியில் இணைத்து அவர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்க உறுதியேற்பதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது;
காங்கிரஸில் தலித்கள்
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தான் தலித்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற கட்சியாக செயல்பட்டு வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவராக 1962 இல் டி.சஞ்ஜீவியய்யா, 1969 ல் பாபு ஜெகஜீவன்ராம் ஆகியோர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களாக தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பதவி வகித்து பெருமை படைத்துள்ளனர். தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
அறநிலையத்துறை
தமிழகத்தில் 1954 ல் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் 8 பேர் கொண்ட அமைச்சரவையில் தலித் சமுதாயத்தைச் சார்ந்த பரமேஸ்வரன் அறநிலையத்துறை அமைச்சராக நியமித்ததை விட ஒரு புரட்சிகரமான நடவடிக்கை வேறு இருக்க முடியாது. தலித்துகளுக்கு ஆலய பிரவேசம் மறுக்கப்பட்ட அக்கால கட்டத்தில் அதே சமுதாயத்தைச் சார்ந்தவரை அறநிலையத்துறை அமைச்சராக்கி அவர் கோயிலுக்கு செல்லும் போது பூரண கும்ப மரியாதையோடு பரிவட்டம் கட்டி கௌரவப்படுத்தியதை எவரும் மறந்திட இயலாது.
கக்கன்
மேலும் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது தியாகி பி. கக்கனுக்கு உள்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் என பல்வேறு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதற்கு பிறகு அவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், அதைத் தொடர்ந்து எல்.இளையபெருமாள், மரகதம் சந்திரசேகர் ஆகியோர் அப்பொறுப்பில் இருந்திருக்கிறார்கள்.
வரலாறு படைத்த இயக்கம்
காந்தியடிகள் தலைமையில் விடுதலை போராட்டத்திலேயே தலித்துகளுக்காக போராடிய கட்சி காங்கிரஸ். அரசமைப்புச் சட்டத்தை தயாரிக்கும் பொறுப்பை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களுக்கு வழங்கிய பெருமை காந்தியடிகளுக்கும், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கும் உண்டு. அப்படி வழங்கப்பட்ட காரணத்தால் தான் இன்றைக்கும் இந்திய மக்களின் குறிப்பாக தலித்து, சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கிற வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் இருக்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் தான் என்பதை 75 ஆண்டுகளுக்கு பிறகும் பெருமையோடு கூற முடியும். இத்தகைய வரலாற்றை படைத்த ஒரே இயக்கம் காங்கிரஸ் தான்.
ஜாதிய மனோபாவம்
காங்கிரஸ் கட்சியில் ஜாதிய மனோபாவம் இருக்கிறது என்று சிலர் கூறுவதை விட வேறு அபத்தமான கருத்து இருக்க முடியாது. சமீபத்தில் சட்டமன்றத் தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், 18 பேரில் இருவர் மட்டுமே தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த நிலையில் அதில் ஒருவரை சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமித்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு. இதையெல்லாம் மறைத்து விட்டு கருத்து கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும்.
தலித் சொந்தங்கள்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் பதவியேற்றிருக்கும் இந்த சூழ்நிலையில் "இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை" என்று கூறி இப்போது அனைத்து தலித் சொந்தங்களையும் கட்சிக்குள் இணைத்து, பாபா சாகேப் அவர்கள் சொன்னது போல் அவர்களுக்கு அரசியல் அதிகாரம் அளித்து தலித் சொந்தங்களுக்கும், கட்சிக்கும் பலம் சேர்க்க பாபா சாஹிப் அம்பேத்கர் நினைவு நாளில் உறுதி ஏற்றதை இங்கு கூற விரும்புகிறேன்.