4 நாட்கள் மதுக்கடைகள், பார்கள் மூடப்படும்.. டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. குடிகாரர்கள் ஜெர்க்
சென்னை: ஜனவரி மாதத்தில் குடியரசு தினம் முழு ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் 4 நாட்கள் மூடப்பட இருப்பதாக டாஸ்மாக் நிர்வாக மேலாண்மை இயக்குனர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகிறது இதேபோல பல்வேறு இடங்களில் உணவகங்கள், ஹோட்டல்கள், மனமகிழ் மன்றங்கள் ஆகிய இடங்களை எஃப் 2 வகை பார்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழக அரசுக்கு வருவாய் அளிப்பதில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகித்து வருகிறது குறிப்பாக தீபாவளி புத்தாண்டு பொங்கல் உள்ளிட்ட நாட்களில் 180 கோடி வரைக்கும் மதுபான வகைகள் விற்பனையாகும். இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் டாஸ்மாக் கடைகள் 4 நாள் மூடப்பட இருப்பதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் அறிவிப்பு
டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஜனவரி 15-ந்தேதி திருவள்ளுவர் தினம், 18-ந்தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26-ந்தேதி குடியரசு தினம் என்பதால், மேற்கண்ட நாட்கள் மதுபானம் விற்பனையில்லா தினங்களாக அனுசரிக்கப்பட இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

மதுக்கடைகள் மூடப்படும்
இதன் காரணமாக ஜனவரி 15ஆம் தேதி, ஜனவரி 18ஆம் தேதி, ஜனவரி 26 ஆம் தேதி ஆகிய நாட்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற பார்களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி சீல் வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதோடு தனியார் உணவகங்கள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதிகளில் செயல்பட்டு வரும் பார்களையும் மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிடவுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு
தமிழக அரசு கொரோனா காரணமாக தமிழகத்தில் வருகிற 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. எனவே ஊரடங்கு காலத்திலும் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் அடைக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இந்த மாதத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் கோரிக்கை
உத்தரவை மீறி மதுபான கடைகள் அல்லது மதுக்கூடங்கள் செயல்பட்டால் அவற்றுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கள்ளச்சந்தையில் மது விற்பனை அதிகரித்து வருகிறது. மதுக்கடைகள் இரவு 10 மணிக்கு பூட்டப்பட்ட பின் கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது












Click it and Unblock the Notifications