வந்தா ’ராஜா’வா தான் வருவேன்! உதயநிதியுடன் இவங்களும் அமைச்சராக போறாங்களா? உற்சாக உடன்பிறப்புகள்..!
சென்னை : தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பதோடு இலாகா மாற்றங்களும் இருக்கும் எனவும், மேலும் இரு புதிய அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த நிலையில் தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றார்.
பதவியேற்று ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், ஒருமுறை மட்டுமே அமைச்சரவையில் சிறு மாற்றம் ஏற்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான புகார்கள் அந்த இலாகா மாற்றம் நடைபெற்றது.

அமைச்சரவை மாற்றம்
இந்த நிலையில் தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நிறைவடைந்தவுடன் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே அதில் இருக்கும் ஒரு மூத்த அமைச்சருக்கும் மற்ற சில அமைச்சர்களுக்கும் இடையிலான இலாகா மாற்றம் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக நீண்ட காலமாக விவாதப்பொருளாக இருந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவாரா? என்ற வினாவுக்கு விடை கிடைக்கும் என கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின்
கட்சியின் முக்கிய முகமாக வலம் வரும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல் அமைச்சர் சேகர்பாபு வரை அடுத்தடுத்து வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது அதற்கு முதல்வர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இந்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உள்ளாட்சித்துறை அமைச்சராகவோ அல்லது செய்தித்துறை அமைச்சராகவோ உதயநிதி ஸ்டாலின் பதவியேற்கலாம் என கூறப்படுகிறது.

ஆதரவாளர்கள் உற்சாகம்
அமைச்சரவையில் மேலும் சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வந்த புதிய தகவல்தான் திமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது உதயநிதி ஸ்டாலினுடன் மேலும் இரு இளம் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளதாக தற்போது அறிவாலய வட்டாரத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவின் டெல்லியில் முக்கிய அடையாளமாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் இருந்தார். அவரது மகன் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கட்சியில் அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆவலோடு எதிர்பார்ப்பு
அதேநேரத்தில் ஆட்சியிலும் அவருக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என நேரடியாகச் சொல்லாவிட்டாலும் மறைமுகமாக பல நேரங்களில் அவரது தந்தை அந்த ஆவலை வெளிப்படுத்தி வந்துள்ளார். இதை கவனித்த திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் வரை வெளிவரும் அமைச்சரவை பட்டியலில் அவர் பெயரும் இடம்பெற உள்ளது. வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற ரீதியில் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அமைச்சர் பதவி
இதேபோல சட்டசபையிலும் சரி மீடியாக்களிடமும் சரி திமுக கொண்டு வந்த திட்டங்களையும், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்களையும் முறியடிக்கும் வகையில் தீவிரமாக பேசி வரும் ஒருவருக்கு பதவி வழங்கப்பட உள்ளது. வழக்கறிஞராகவும் பணியாற்றி வந்தவர் பல நேரங்களில் திமுகவுக்கு எதிரான வழக்குகளில் வாதாடி வந்துள்ளார். எனவே அவரது உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அவரையும் அமைச்சராக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும், இவை அனைத்தும் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் இறுதி முடிவை பொறுத்தே அமையும் என்கின்றனர் உடன் பிறப்புகள்.












Click it and Unblock the Notifications