மிஸ்டர் பழனிசாமி.. ஒரே போடாக போட்ட ஸ்டாலின்.. "அதை" குறி வைத்து.. துல்லியமாக தாக்கும் திமுக!
சென்னை: அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் சமூகநீதி; அனைத்துத் தமிழ் மக்களின் அரசாக - அனைத்துச் சமூகத்துக்கும் சரிவிகித நன்மை செய்யும் அரசாக - சமூகநீதி அரசாகச் செயல்படுவதுதான் தி.மு.க. அரசு என்று மு.க ஸ்டாலின் பிரச்சாரத்தில் குறிப்பிட்டுள்ளார்... நேற்று திமுக பிரச்சாரத்தில் ஸ்டாலின் குறிப்பிட்ட விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் பாலக்கோட்டில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
எகிறிய கோபம்.. தூது விட்டும் பயன் இல்லை.. பளாரென திருமா எடுத்த முடிவு.. அடுத்தடுத்து சென்ற வார்னிங்!
வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் நீங்கள் எல்லாம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார் .
விவசாயம்
தமிழக முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயியாக முன்னிறுத்தி வருகிறார். தற்போது அதையே குறி வைத்து ஸ்டாலின் தாக்க தொடங்கி உள்ளார். விவசாயிகளுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த சட்டங்களை பட்டியலிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தாக்க தொடங்கி உள்ளார். நேற்று நடந்த பிரச்சாரத்திலும் ஸ்டாலின் இதைத்தான் குறிப்பிட்டார்.
ஸ்டாலின்
ஸ்டாலின் தனது பேச்சில், தருமபுரி தொகுதியில் கழக வேட்பாளராக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக தடங்கம் சுப்பிரமணி, ஏற்கனவே இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்கட்சியாக இருந்தாலும் சட்டமன்றத்தில் குரல் கொடுத்து உங்களுக்காக வாதாடியவர் போராடியவர். இந்த தொகுதி மக்களோடு இரண்டறக் கலந்திருப்பவர். அதனால் தான் மீண்டும் தேர்ந்தெடுத்து உங்களிடத்தில் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம்.
காரணம்
அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், பென்னாகரம் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக அருமை சகோதரர் இன்பசேகரன் அவர்கள், மறைந்த நம்முடைய அன்பிற்குரிய பெரியண்ணன் அவர்களுடைய அருமை மகன். பென்னாகரம் தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த தொகுதி மக்களோடு இரண்டறக் கலந்து அந்த தொகுதிக்காக பல்வேறு திட்டங்களை சாதனைகளை உருவாக்க காரணமாக இருப்பவர்.
ராஜசேகர்
அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக டாக்டர் பிரபு ராஜசேகர் அவர்கள், ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்கி அவர்களுடைய உள்ளங்களில் நன்மதிப்பைப் பெற்றவராக விளங்கி கொண்டிருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், பாலக்கோடு தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக வழக்கறிஞர் பி.கே.முருகன் அவர்கள், ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்.
முதல்வர்
இவர்களுக்கு வாக்குக் கேட்க வந்திருக்கும் நானும் ஒரு வேட்பாளர் தான். முதலமைச்சர் வேட்பாளராக நிற்கிறேன். இவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர். எனவே அதை மனதில் வைத்துக்கொண்டு நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று உங்களை நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
விளம்பரம்
இப்போது அதிமுகவினர் கோடி கோடியாக செலவு செய்து, பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் மக்களின் வரிப் பணத்தைப் பயன்படுத்தி விளம்பரப்படுத்தி கொண்டிருப்பதெல்லாம் என்ன?விவசாயிகளை காப்பாற்றி விட்டதாக, வேளாண்மையைச் செழிக்க வைத்து விட்டதாகப் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
ஏமாற்றம்
அவர் விவசாயி அல்ல, போலி விவசாயி. போலி விவசாயியாக இருக்கும் மிஸ்டர் பழனிசாமி அவர்களே... நீங்கள் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவே முடியாது. எவ்வளவுதான் விளம்பரம் கொடுத்தாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எவ்வாறு மந்திரத்தால் மாங்காய் வரவழைக்க முடியாதோ, அதேபோல எவ்வளவு விளம்பரத்தாலும் இந்த மண்ணை செழிக்க வைக்க நிச்சயம் முடியாது.
விளம்பரத்தால் விவசாயி ஆகிவிடலாம் என்று நினைக்கிறீர்கள். இது விவசாயிகளுக்கு கேவலம். எப்போது பார்த்தாலும் விவசாயி விவசாயி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பச்சைத் துண்டு போட்டுக் கொண்டிருக்கும், விவசாயிகளுக்கு பச்சை துரோகியாக அவர் நடந்து கொண்டிருக்கிறார். இதை நிச்சயம் விவசாயிகள் மறக்கமாட்டார்கள்.
அடிமை
புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு இன்னமும் இழப்பீடு தர வில்லை. இது அனைத்திற்கும் மேலாக இலவச மின்சாரத்தை ரத்து செய்ய துடிக்கும் மத்திய அரசிற்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்கும் அடிமை ஆட்சிதான் பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி.மீட்டரை பொருத்தி மத்திய அரசு விவசாயிகளிடம் பணம் வாங்க போகிறார்கள். மூன்று வேளாண் சட்டத்தை ஆதரித்த, வேளாண் விரோத அ.தி.மு.க. அரசை நீங்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
பின்னோக்கி
பத்தாண்டுகாலமாக இந்த தமிழகத்தை சீரழித்து விட்டார்கள். தமிழகம் 50 ஆண்டு காலம் பின்னோக்கி பாதாளத்துக்கு சென்று விட்டது. ஊழல் செய்வது - பொய் சொல்வதுதான் இந்த ஆட்சி.இந்த ஆட்சியின் அவலத்தை எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், இது பொல்லாத ஆட்சி - அதற்கு சாட்சி பொள்ளாச்சி, இது துப்புகெட்ட ஆட்சி - அதற்கு சாட்சி தூத்துக்குடி, இது சாகடிக்கும் ஆட்சி - அதற்கு சாத்தான்குளம் சாட்சி, இது அ.தி.மு.க. ஆட்சி அல்ல, இது அடிமை ஆட்சி.
பாஜக வராது
எத்தனை முறை பிரதமர் வந்து பிரச்சாரம் செய்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. வரவேப்போவதில்லை. அதே நேரத்தில் ஒரு அ.தி.மு.க. வேட்பாளர்கூட வெற்றி பெற்று விடக்கூடாது. அ.தி.மு.க. வேட்பாளர் வென்றால் அவர் பாஜக எம்எல்ஏ-தான். தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, மத வெறியை தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது. இது திராவிட மண். தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் வாழ்ந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது. இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய சுய மரியாதையைக் காப்பாற்றுவதற்காக நடக்கின்ற தேர்தல் என்பதை மறந்துவிடாதீர்கள், என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.