வேலையே செய்யலை.. மட்டம் போட்ட மாவட்ட செயலாளர்கள்! அதிமுக தலைமைக்கு பறந்த புகார்! என்னாச்சு?
சென்னை: மழைவிட்டாலும் தூறல் விடவில்லை என்பது போல தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்து இருக்கும் நிலையில் சில கட்சிகள் தங்களின் நிர்வாகிகளின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலும் பல சிக்கல்கள் எழுந்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மையம் கொண்டிருந்த தேர்தல் புயல் வாக்குப்பதிவுக்கு பிறகு ஓய்ந்திருக்கிறது. 19ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் அரசியல் கட்சிகள் பெரிய அளவிலான எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தவில்லை.

இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆளுங்கட்சி தொடங்கி எதிர்க்கட்சிகள் வரை ஆர்ப்பாட்டம் போராட்டம் மாநாடு என எந்த விதமான அரசியல் நிகழ்ச்சிகளிலும் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றன
தேர்தல் நிறைவு: அதே நேரத்தில் தேர்தலின் போது தலைவர்கள் அனைவரும் மிகவும் பரபரப்பாக இயங்கினர். கூட்டணி பேச்சு வார்த்தை, கூட்டணி இறுதி செய்வது, வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என தொடர்ந்து பம்பரமாக சுழன்று பணியாற்றி வந்தனர், ஒரு வழியாக தேர்தலும் நிறைவடைந்து இருக்கும் நிலையில் தற்போது தேர்தலின் போது ஏற்பட்ட பின்னடைவுகள், பிரச்சனைகள், சிக்கல்கள் என்னென்ன? என்பது குறித்து கட்சி தலைமைகள் ஆராய்ந்து வருகின்றன.
அதிமுகவில் அதிருப்தி: அந்த வகையில் அதிமுக திமுக என இரண்டு கட்சிகளுமே தேர்தலில் ஒழுங்காக பணியாற்றாத நிர்வாகிகள் குறித்து கணக்கெடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலும் பல்வேறு புகார்கள் தலைமைக்கு சென்றிருக்கிறது. .போட்டியிட்ட தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடு திருப்திகரமாகவே இருந்திருக்கிறது. மேலும் தேர்தல் பொறுப்பாளர்களும் சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றியதால் அதிமுக தலைமை திருப்தியில் இருக்கிறது.
கூட்டணிக் கட்சிகள்: அதே நேரத்தில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் அந்தந்த பகுதி அதிமுக மாவட்ட செயலாளர்களும் பகுதி செயலாளர்களும் ஒழுங்காக பணியாற்றவில்லை என புகார்கள் சென்றிருக்கிறது. இதனால் கூட்டணி கட்சி தலைவர்களும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் செலவுக்காக தலைமை கொடுத்த பணத்தை உரிய முறையில் கடைமட்ட நிர்வாகிகளுக்கு கொண்டு போய் சேர்க்கவில்லை.
தேர்தல் பணியில் சுணக்கம்: இதனால் கடைசி நேர தேர்தல் பணியில் சுணக்கம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் தங்களுடன் உரிய முறையில் இணைந்து பணியாற்றவில்லை என சில மாவட்ட செயலாளர்கள் மீது கூட்டணி கட்சியினர் புகார் கூறியிருக்கின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் உரிய பங்களிப்பை அளிக்கவில்லை எனவும் பிரச்சாரம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு கூட தங்கள் ஆதரவை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தலைமைக்கு புகார்: மேலும் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை கூட உரிய முறையில் செய்து தரவில்லை எனவும் இதனால் பல வாக்குச்சாவடிகளில் பூத் ஏஜெண்டுக்குள் கூட நியமிக்க முடியாமல் போய்விட்டதாக புலம்பியுள்ளனர். தேர்தல் செலவுக்காக தலைமை கொடுத்த பணத்தையும் உரிய முறையில் செலவு செய்யாததால் தங்களுக்கு வாக்குகள் வெகுவாக குறைந்திருப்பதாகவும் அதிமுக தலைமைக்கு புகார்கள் கிளம்பி இருக்கிறது. இதை அடுத்து அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் நிர்வாகிகளை தனித்தனியே அழைத்து விசாரிக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications