இலங்கைக்கு கொத்து குண்டுகளை கொடுத்ததா உக்ரைன்? இலங்கை தமிழர்களின் சாபம் போருக்கு காரணமா..உண்மை என்ன?
சென்னை : உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து உள்ள ரஷ்யா அந்த நாட்டில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தி மக்களை கொன்று வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது உக்ரைன் நாடு இலங்கை ராணுவத்திற்கு இதே வகை கிளஸ்டர் குண்டுகளை கொடுத்ததாக தகவல் பரவி வருகிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் ராணுவ வீரர்களும் எதிர்த்து நின்று களமாடி வருகின்றனர்.

உக்ரைன் போர்
உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதால் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்த நிலையில் சில ராணுவ வீரர்கள், தற்கொலைப் படையாக மாறி ரஷ்யப் படைகளை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

கிளஸ்டர் கொத்து குண்டுகள்
உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகளில் ரஷ்யப் படைகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்துகின்றன. போர் காரணமாக மெட்ரோ சுரங்க பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் கிளஸ்டர் பாம் எனப்படும் கொத்துக் குண்டுகளை ரஷ்யா பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஜெனீவா உடன்பாட்டின்படி தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள். வெள்ளைப் பாஸ்பரஸ் குண்டுகள், நாபாம் குண்டுகள் ஆகியவற்றை ரஷ்யா பயன்படுத்தி வருதாகவும் புகார் எழுந்துள்ளது.

இலங்கை அரசு
இதேபோல கிளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகளை இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை ராணுவம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளை கிளஸ்டர் கொத்துக் குண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கைப் போரின்போது சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் கொத்துக் குண்டுகளால் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் இதனை இலங்கை அரசு மறுத்த நிலையில் , இதுகுறித்து பிரிட்டனைச் சேர்ந்த பிரபல நாளிதழான தி கார்டியன் புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது.

ஏராளமானோர் பதிவு
இந்த நிலையில் இலங்கை இறுதிகட்ட போரின் போது அமெரிக்க கூட்டணியில் இருந்த உக்ரைன் ராணுவம் இலங்கை அரசுக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்கியதாக முகநூல் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் இலங்கை அரசுக்கு உதவியதன் மூலம் இன அழிப்பில் பங்கெடுத்ததாக உக்ரைன் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதன் காரணமாகவே தற்போது உக்ரைன் மீதும் அதே கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்படுவதாக பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் இறுதிக்கட்ட போரின்போது இலங்கைக்கு நேரடியாக ராணுவ உதவி மற்றும் ஆயுத உதவியை உக்ரைன் வழங்கியதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications