பிரைவசி பறிப்பு.. புதிய ஐடி விதியை எதிர்த்து நீதிமன்றம் சென்ற கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா
சென்னை: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் மத்திய அரசு 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக ஊடகங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக "தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021" என்பதை கொண்டு வந்தது.
இதற்கு சமூக ஊடகங்கள் ஒப்புதல் அளிக்க மே 25ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. இதற்கு கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் சமூக வலைத்தளங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. ட்விட்டர் நிறுவனம் சில ஆட்சேபனைகளைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்த விதிகளை எதிர்த்து, பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் அவர், ஒரு இசைக் கலைஞர், கலாச்சார மற்றும் அரசியல் விமர்சகர் என்ற அடிப்படையில் அரசியலமைப்பு வழங்கியுள்ள சுதந்திரமான கருத்துரிமை, தனியுரிமை ஆகியவற்றை மதிப்பதாகவும், தனியுரிமை என்பது இசையைப் போல ஒரு அனுபவம் என்று தெரிவித்திருந்தார்.
தனியுரிமை என்பது வாழ்க்கை, புதிய கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு, மகிழ்ச்சி, உருவாக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்பதால், அவை சுதந்திரமாகவும், கண்ணியத்துடனும், தன் விருப்பப்படும்படி கிடைக்கும்போதுதான் தன்னைப் போன்றோர் ஒரு கலைஞனாக மட்டுமல்ல மனிதனாகவும் உணரமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார் டி.எம்.கிருஷ்ணா.
சமூக ஊடக சேவைகளின் பயனாளராகவும், ஆன்லைன் உள்ளடக்கத்தை உருவாக்கியவர் என்ற முறையிலும் தனது உரிமைகளை பறிப்பதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய விதிகளை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தார். டி.எம்.கிருஷ்ணாவின் மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 3 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.