இலங்கை நெருக்கடி.. முதல்வர் ஸ்டாலினிடம் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!
சென்னை: இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் நிவாரண நிதிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ரூபாய் 5 இலட்சம் வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நேரில் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கேஎம்.காதர் மொகிதீன் சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின் போது அண்டை நாடான இலங்கை மக்களின் துயர் துடைக்கும் வகையில் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்பட இருக்கும் நிவாரண நிதிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் ரூபாய் 5 இலட்சத்திற்கான வரைவோலை மற்றும் மணிச்சுடர் ரமலான் சிறப்பு மலரை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வழங்கினார்.
முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள் மூன்றாம் பாகம் நூலை தமிழ்நாடு முதலமைச்சரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வழங்கி வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பின்போது முஸ்லிம் மாணவிகள் உயர்கல்வியை தொடர்ந்திட சென்னை, லால்பேட்டை, நாகூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மகளிர் கல்லூரி துவங்கிட தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபைக்குச் சொந்தமான நிலத்திற்கு 1969 முதல் பட்டா வழங்குவதில் காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. அதற்குரிய பட்டா வழங்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்த வேண்டும்.
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் நடத்த திட்டமிட்டிருக்கும் பன்னூல் ஆசிரியர் எம்.ஆர்.எம்.அப்துல் ரஹீம் நூற்றாண்டு விழாவிற்கு முதலமைச்சர் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்திட தமிழ்நாடு முதலமைச்சரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கேட்டுக் கொண்டார். இச்சந்திப்பின்போது மாநில செயலாளர் கே.எம்.நிஜாமுதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு விலைவாசி உயர்ந்து பொருளாதாரத்தை சரி செய்ய முடியாத ராஜபக்சக்களை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தமிழகத்திலிருந்து நிவாரணம் அனுப்பப்படுகிறது குறிப்பிடத்தக்கது.