பிறந்தபோதும் தாயின் அருகில்... இறந்த பிறகும் தாயின் அருகில்... ஜெ. அன்பழகனுக்கு கிடைத்த பாக்கியம்
சென்னை: மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல் அவரது தாய், தந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்தையொட்டியே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனை காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை தொற்றுநோய் விதிகளின் படி குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
அன்பழகன் தனது 62-வது பிறந்தநாளான இன்று காலமான நிலையில் அவரது உடல் சென்னை கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. பிறக்கும்போது தாயின் அருகில் இருந்ததை போல் இறந்தபின்னரும் அவரது உடல் தாயின் அடக்க ஸ்தலத்தை ஒட்டி அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டிலும் அன்பழகனுக்கு தாயின் அரவணைப்பு கிடைத்துள்ளது என்று கூட கருதலாம்.
இதனிடையே குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் இருந்து கண்ணம்மாபேட்டை இடுகாட்டிற்கு அன்பழகன் உடல் கொண்டுவரப்பட்ட போது பல இடங்களில் சாலையின் இரு மருங்கிலும் நின்று திமுகவினர் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்கம் முழக்கம் எழுப்பினர். மேலும், அடக்கம் செய்யப்பட்ட கண்ணம்மாப்பேட்டை இடுகாட்டிலும் நூற்றுக்கணக்கானோர் திரண்டுவிட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
நிறைவேறா ஆசை.. கருணாநிதி இறப்பதற்கு முன்பே தன் உயிர் பிரிய விரும்பிய ஜெ அன்பழகன்
மறைந்த ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவரது உடல் மரப்பெட்டியில் வைத்து அடைத்து எடுத்துவரப்பட்டது. இறுதிச்சடங்கில் சென்னை மேற்கு மாவட்ட திமுகவினர் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர்.