வேதா நிலையம் விற்பனைக்கு அல்ல.. அத்தை வீட்டில் விரைவில் குடியேற போகிறேன்.. ஜெ தீபா பரபரப்பு தகவல்
சென்னை: வேதா நிலைய இல்லம் எங்களது பூர்வீக சொத்து அதை நாங்கள் விற்பனை செய்யவில்லை என ஜெ தீபா மறுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவருடைய அண்ணன் மகள் ஜெ தீபா மீடியா லைம்லைட்டில் அதிகம் பேசப்பட்டார். அதிமுகவை மீட்க எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை எனும் அமைப்பை தொடங்கி நடத்திவந்தார்.
இந்த நிலையில் சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அவ்வப்போது கணவர் மாதவனுக்கும் தீபாவுக்கும் இடையே குடும்பச் சண்டை நடைபெறும். எப்போதும் போல் சில நாட்கள் அல்லது மணி நேரங்கள் நீடிக்கும்.
Recommended Video
வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை ரத்து செய்த வழக்கு! சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக மேல்முறையீடு
மாதவன்
அது போல் கடந்த சில தினங்களுக்கு முன்பும் மாதவனுக்கும் தீபாவுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் மாதவன், தீபாவை விவாகரத்து செய்யுமாறு நிர்பந்தித்ததாக தீபாவே வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். இந்த நிலையில் இதை மாதவன் மறுத்தார்.
குடும்பச் சண்டை
பின்னர் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் தீபா தற்கொலைக்கு முயன்றதாக வதந்தி பரவின. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் ஒன் இந்தியா தமிழ் தொடர்பாக அவரை தொடர்பு கொண்டு கேட்ட போது தனக்கும் தனது கணவருக்கும் வழக்கம் போல் குடும்பத் தகராறு இருந்தது உண்மைதான்.
இரு வீட்டார்
அதை இரு வீட்டாரும் சேர்ந்து சமரசம் பேசி முடித்துவிட்டனர். தான் தற்கொலை முயற்சி செய்யவும இல்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படவும் இல்லை. தன் மீது இது போல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டு கொண்டார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை பராமரிக்கும் உரிமை பெற்ற ஜெ தீபா அந்த வீட்டை விற்பனை செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
வேதா நிலையம்
இந்த தகவலையும் அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ஒரு மிகுந்த சட்ட போராட்டத்திற்கு பிறகே போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் என்ற பூர்வீக சொத்து , அதாவது எனது தந்தை ஜெயக்குமார் மற்றும் அத்தை ஜெயலலிதா ஆகியோரின் தாயான பாட்டி சந்தியாவால் கட்டப்பட்டு அவர் அந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்கள்.
பாட்டி சந்தியா
பாட்டி சந்தியா இறந்த பிறகு உயில் மூலம் அத்தை ஜெயலலிதா அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதே நேரம் எனது தந்தை ஜெயக்குமாரும் வேதா நிலையத்தில்தான் வசித்து வந்தார். அந்த காலகட்டங்களில் எனது அத்தை சினிமா துறையில் நடிகையாக இருந்தார். எனது தந்தை ஜெயக்குமாரின் திருமணம் நடைபெற்றது. ஜெயலலிதா உள்ளிட்ட உறவினர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
கூட்டுக் குடும்பம்
இதன் பிறகு எனது தந்தை ஜெயக்குமார், தாய் விஜயலட்சுமி, அத்தை ஜெயலலிதா ஆகியோர் வேதா இல்லத்தில்தான் பல காலமாக கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்கள். இப்படியொரு சாதாரண இல்லமாதான் அந்த காலகட்டங்களில் அந்த வீடு இருந்தது. அந்த இல்லத்தில் என் தாய் தந்தை வசித்த போதுதான் நான் பிறந்தேன்.
கருத்து வேறுபாடுகள்
சில காலம் கழித்து ஒரு சில கருத்து வேறுபாடுகளால் என் தாய், தந்தை அந்த வீட்டை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் திநகரில் உள்ள மற்றொரு பூர்வீக இல்லத்தில் வசித்து வந்தனர். எனினும் எனது அத்தையை பார்க்க நாங்கள் வேதா நிலையத்திற்கு சென்று வந்தோம். அப்போது அவர் வேதா நிலையத்திலேயே இருங்கள் என கேட்டதால் நாங்கள் அங்கேயே இருந்தோம்.
தீபாவுக்கும் தீபக்கிற்கும் சொந்தம்
பின்னர் அவர் அரசியலில் ஈடுபட்டவுடன் அஙகிருந்து நாங்கள் மீண்டும் வெளியே வந்துவிட்டோம். என் தாய், தந்தையிடம் இருந்து நான் தெரிந்து கொண்டது இதுதான். எனவே வேதா நிலையம் எங்கள் பூர்வீக சொத்து என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. எனது பாட்டிக்கு பிறகு உயில் மூலம் அத்தைக்கு சென்றது. அத்தைக்கு திருமணம் ஆகாததால் எனது தந்தை மூலம் இந்த சொத்தை நானும் எனது தீபக்கும் திரும்ப பெற்றோம். எனவே அதை பராமரித்து வரும் நிலையில் வேதா நிலையத்தை நாங்கள் விற்கவில்லை என தெரிவித்துள்ளார்.