பூகம்பமாக வெடிக்கும் 41,000 கோடி ரகசியம்.. ‘அந்த பணம் யாருடையது?’- கேங் வாரில் புகுந்த மார்க்சிஸ்ட்!
சென்னை : ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் கூறிய ரூ.41,000 கோடி ரகசியத்தை அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதலுக்கு மத்தியில், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் பற்ற வைத்த நெருப்பு, ஈபிஎஸ் தரப்பை கதிகலங்கச் செய்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய ரூ.41,000 கோடி ரகசியத்தை, ஓபிஎஸ்ஸிடம் பேசிவிட்டு வெளியிடுவேன் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டிபிரபாகரன் மிரட்டல் விடுத்தார்.
இந்த விவகாரம் இரு தரப்பினருக்கும் இடையேயான கேங் வாராக இருந்த நிலையில், "அவ்வளவு பிரம்மாண்டமான தொகை யாருடையது? அது ஏதாவது கணக்கிற்கு உட்பட்டதா? வருமான வரி செலுத்தப்பட்டதா?" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்கமணி ஆவேசத்துக்கு மூல காரணமே இதானா..? கொங்கு மண்டலத்தில் 'கொக்கி’ போட்ட ஓபிஎஸ்.. பக்கா மூவ்!
ஓபிஎஸ் பிரிக்க நினைத்தார்
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், எடப்பாடி ஆதரவாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான தங்கமணி அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசியபோது, "கட்சி உடையக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தார். பின்னர் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனையின்போது இணை பொதுச் செயலாளர் பதவி தருவதாகவும் சொன்னார். ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவும் ஒப்புக்கொண்டார். ஆனால், ஈபிஎஸ் பிளவுபடுத்தவே முயன்றார்" என ஓபிஎஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பற்ற வைத்த ஜேசிடி
தங்கமணி பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகரன், எடப்பாடி பழனிசாமி பற்றி இன்னொரு பகீர் நெருப்பையும் பற்ற வைத்தார். எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய ரூபாய் 41,000 கோடி ரகசியத்தை வெளியிட நேரிடும் என ஜே.சி.டி.பிரபாகரன் மிரட்டல் விடுத்தார். ஓ.பன்னீர்செல்வம் அனுமதியளித்தால் ரகசியத்தை பகிரங்கப்படுத்த தயார் என்றும், நவம்பர் 21க்கு முன்பாகவே பகிரங்கப்படுத்த உள்ளதாகவும் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.
41,000 கோடி - அதிர்வலை
ஓபிஎஸ் ஆதரவாளரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெசிடி பிரபாகர் சொல்லும் 41,000 கோடி கணக்கு என்ன என அதிமுக தொண்டர்களும் குழம்பி வருகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், அந்த 41,000 கோடி ரூபாய் யாருடையது? அதற்கு வருமான வரி செலுத்தப்பட்டதா? என்பதை அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அந்தப் பணம் யாருடையது?
இது தொடர்பாக சிபிஐஎம் மாநிலச் செயலாளர் பாலாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன்" என்று அதிமுகவின் ஓபிஎஸ் தரப்பினரான ஜேசிடி பிரபாகரன், எடப்பாடி பழனிசாமியை எச்சரிக்கும் பேச்சு ஊடகங்களில் வந்துள்ளது. அவ்வளவு பிரம்மாண்டமான தொகை யாருடையது? அது ஏதாவது கணக்கிற்கு உட்பட்டதா? வருமான வரி செலுத்தப்பட்டதா? அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
அரசியல் அரங்கில்
இதனால், இந்த விவகாரம் அதிமுக எல்லையைத் தாண்டி சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி புகார்களைக் கூறி வரும் நிலையில், '41,000 கோடி ரகசியம்' அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சிபிஐஎம் கட்சி மாநில செயலாளரும் இதுகுறித்துப் பேசியிருப்பதால், வரும் நாட்களில் இந்த விவகாரம் பெரும் விவாதங்களைக் கிளப்பப் போவது நிச்சயம்.