எஸ்பி வேலுமணி தப்பிப்பாரா? சொத்து குவிப்பு-டெண்டர் முறைகேடு வழக்கில் நாளை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது அமைச்சராக இருந்தவர் எஸ்பி வேலுமணி. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் எஸ்பி வேலுமணி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்தார்.
இந்நிலையில் தான் எஸ்பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது டெண்டர் முறைகேடு நடந்ததாகவும், அவர் தனது வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார்கள் எழுந்தன.
கண்ணைக் காட்டிய எடப்பாடி.. ஸ்கெட்ச் போட்ட வேலுமணி.. டிச.2ல் இருக்கு.. பலத்தைக் காட்ட 'பலே’ திட்டம்!
எஸ்பி வேலுமணி மீது 2 வழக்கு
இதுதொடர்பான புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்திருந்தனர். அதன்படி சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவித்ததாக எஸ்பி வேலுமணி மீது வழக்குகள் பதிவாகின. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எஸ்பி வேலுமணியின் வீடு, ஒப்பந்ததாரர்கள், உறவினர்கள் என பலரது வீடுகளில் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ரத்து செய்ய எஸ்பி வேலுமணி வழக்கு
இதற்கிடையே தான் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்பி வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் மீது நீதிபதி பிஎன் பிரகாஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை துவங்கியது.
நீதிமன்றத்தில் துவங்கிய வாதம்
இந்த வேளையில் எஸ்பி வேலுமணி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது, ஏற்கனவே டெண்டர் முறைகேடு புகாரில் முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை கூறி வழக்கை கைவிடுவதாக கூறிய நிலையில் ஆட்சி மாற்றத்தால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்படி டெண்டர் கோரப்பட்டது. இதில் எந்த முறைகேடும் இல்லை என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் புகார்தாரராக உள்ள அறப்போர் இயக்கம் சார்பில் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கு ஏராளமான ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. உள்நோக்கத்துடன் தற்போதைய அரசு வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாஜி அமைச்சர் கூறுவது தவறானது என வாதிடப்பட்டது.
திமுக ஆர்எஸ் பாரதி தரப்பு
இந்த வழக்கில் இன்னொரு புகார்தாரரான திமுகவின் ஆர்எஸ் பாரதி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அப்போது, ‛‛தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் வழக்குப்பதிவு செய்திருப்பதாக கூறுவது தவறானது. புலன் விசாரணையின் அடிப்படையில் தான் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என வாதிடப்பட்டது. இந்த வேளையில் லஞ்சம் ஒழிப்புத்துறை சார்பிலும் எஸ்பி வேலுமணிக்கு எதிராக வாதிடப்பட்டது. அப்போது முறைப்படி அடிப்படை விசாரணையின் அடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக வாதிடப்பட்டது.
நாளை வெளியாகும் தீர்ப்பு
இறுதி விசாரணையும் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு என்பது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தான் டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு, சொத்து குவித்தாக பதிவான வழக்குகளை ரத்துசெய்யக்கோரிய வழக்குகளில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. அதன்படி நாளை மதியம் 2.30 மணியளவில் வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது.