எடப்பாடி VS ஓபிஎஸ்! யாருக்கு வெற்றி? அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு! நாளை ஹைகோர்ட் தீர்ப்பு?
சென்னை: அதிமுக சார்பில் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவை எதிர்க்கும் வழக்குகளில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது மிகவும் முக்கியமான தீர்ப்பு என்பதால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் தரப்பில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
அதிமுகவில் உள்கட்சி பிரச்சனை எழுந்தது. ஒற்றை தலைமை விவகாரம் தலைத்தூக்கியது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு
இந்நிலையில் தான் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு எதிராக ஓபன்னீர் செல்வம் தரப்பு நீதிமன்றத்தை அணுகியது. உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

ஓ பன்னீர் செல்வம் தரப்பு வாதம்
இதில் ஓ பன்னீர் செல்வம், வைரமுத்து மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர். பன்னீர் செல்வம் தரப்பில், ‛‛ ஜூன் 23 பொதுக்குழுவில் எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. பொதுக்குழு ஒப்புதல் அளிக்காவிட்டால் இரு பதவிகளும் காலாவதியாகி விடும் என ஜூன் 23 பொதுக்குழு தீர்மானத்தில் எங்குமே குறிப்பிடவில்லை. மேலும் பொதுக்குழு நிகழ்ச்சி நிரல் தயாரித்து உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்றும், அந்த நோட்டீசைதான் பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்கள் கொண்டு வர வேண்டும். இது முறையாக பின்பற்றப்படவில்லை. இதனால் ஜூலை 11 பொதுக்குழு யாரையும் கட்டுப்படுத்தாது. ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிரந்தர அவைத்தலைவர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்டவர் அல்ல'' என வாதிடப்பட்டது. இதேபோல் வைரமுத்து தரப்பிலும் வாதம் முன்வைக்கப்பட்டது.

பழனிச்சாமி தரப்பு வாதம்
பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் வாதாடுகையில், ‛‛அதிமுக கட்சி விதிகளின்படியே பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பதவி காலாவதியாகவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டும் காலாவதியாகிவிட்டது. ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்திற்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை எனக்கூற முடியாது. ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவின் போது அறிவிக்கப்பட்டது. 2432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் 2021 டிசம்பரில் பதவிகள் காலாவதியாகிவிட்டன. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் திருத்த விதிகளின்படி நடத்தப்பட்டது. பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு பிறகு, கட்சியை வழி நடத்த பழனிசாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளனர். அதிமுக.,வில் தான் உள்கட்சி தேர்தல் ஜனநாயக பூர்வமாக நடத்தப்பட்டுள்ளது'' என வாதிடப்பட்டது.

நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்பு
இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தான் வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. அதன்படி நாளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்குவார். அதிமுக கட்சியில் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானதாகும். இதனால் இந்த தீர்ப்பை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் தரப்பு எதிர்பார்த்து காத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications