ஏழைகளுக்கு ஒரு நியாயம்.. சாஸ்திராவுக்கு ஒரு நியாயமா? உயர்நீதிமன்றத்துக்கு கே.பாலகிருஷ்ணன் கேள்வி
சென்னை: ஏழை நடுத்தர மக்களின் வீடுகளை இடிக்க வேண்டும் என உத்தரவிடும் உயர்நீதிமன்றம், அரசு நிலங்களை ஆக்கிரமித்து இருக்கும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திடம் மென்மையை கடைப்பிடிப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனம் அருகே உள்ள 31.37 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து பல்வேறு கல்வி நிறுவனங்களை கட்டியது.
இந்த இடத்தை 4 வாரங்களுக்குள் காலி செய்ய தஞ்சாவூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் நீர் நிலைகள் உள்ளதா என்பது குறித்து அரசு பதிலளிக்க வலியுறுத்தி 24 ஆம் தேதி வழக்கை தள்ளிவைத்தார்.
ஒரே நாளில் ஒரே இடத்திற்கு வரும் 3 'பெரும் தலை’கள்.. பெரிய சம்பவம் நடக்குமா? - தகிக்கும் அதிமுக!
ஏழைகளின் வீடுகள்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "தமிழகத்தில் சாதாரண ஏழை நடுத்தர மக்கள் தங்கள் சிறுசேமிப்பிலிருந்து சொந்தமாக கட்டிய ஆயிரக்கணக்கான வீடுகளை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் எனவும், அதை அமல்படுத்த மறுக்கிற அதிகாரிகளை சிறைக்கு அனுப்புவேன் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து கடுமைகாட்டுகிறது.
சாஸ்திரா பல்கலைக்கழக வழக்கு
ஏழை எளிய மக்களின் வீடுகளை இடிப்பதால் கண்ணீரும் கம்பலையுமாக அலைகிற காட்சிகள் மனிதநேயம் உள்ள அனைவரையும் உலுக்கி எடுக்கின்றன. ஆனால் நீதிமன்றம் அந்த அழுகுரல்களை கேட்கவோ அல்லது அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என உத்தரவிடவோ கூட மறுக்கிறது. இவ்வளவு கடுமையாக நடந்துகொள்ளும் நீதிமன்றம் தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழக வழக்கில் செய்வது என்ன?
31 ஏக்கர் நிலம்
அரசுக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம், கடந்த 30 ஆண்டுகளாக கொள்ளை இலாபம் சம்பாதித்து வருகிறது. அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்துள்ளது.
பாரபட்சம் ஏன்?
உயர்நீதிமன்றம், அரசின் உத்தரவை அமலாக்க சொல்லியிருக்க வேண்டும், மாறாக சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அரசு தரப்பில் ஆவணங்கள் சமர்ப்பிக்கும் வரை வழக்கு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் என உத்தரவிட்டுள்ளது. சாதாரண ஏழை எளிய மக்களிடம் கடுமையும், சாஸ்திரா பல்கலைக்கழகத்திடம் மென்மையும் கடைப்பிடிக்கும் இந்த பாரபட்சம் ஏனோ?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.