இனி அதிமுகவில் வன்னியர் அணி, கவுண்டர் அணி, தேவர் அணி உருவாகும்.. கே சி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி
சென்னை: இனி அதிமுகவில் வன்னியர் அணி, கவுண்டர் அணி, தேவர் அணி உருவாகும் என முன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அவர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் அதிமுக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமார் நியமிக்கப்பட்டதன் பின்னணி என்ன என கேட்டால் ஜாதிய அடிப்படைதான். உதயகுமார் அதிமுகவில் சேர்ந்ததே 2008ஆம் ஆண்டுக்கு பிறகுதான்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை அவர் முன்பு செருப்பு கூட போட மாட்டார் உதயகுமார். ஜெயலலிதா இறப்புக்கு பிறகு ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தார். சசிகலா முதல்வராக முயற்சித்த போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருந்தார். பின்னர் தன்னை ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவராக காட்டிக் கொண்டார்.
எனவே உதயகுமார் அதிமுக பாரம்பரியத்தில் நீண்ட காலம் பயணம் செய்தவர் அல்ல. ஜாதிய கணக்குகளை வைத்து அவருக்கு சில வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஓபிஎஸ்ஸும் ஆர் பி உதயகுமாரும் ஒரே சமூகத்தினர். அந்த அடிப்படையில் உதயகுமாருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் பல அணிகள் உள்ளன. அது போல் கவுண்டர் அணி, மறவர் அணி, கள்ளர் அணி, வன்னியர் அணி, அகமுடையார் அணி என ஜாதிக்கு ஒரு அணி உருவாக்கப்பட்டு அந்தந்த ஜாதிக்கு ஒருவரை எடப்பாடி பழனிச்சாமி நியமித்துவிடுவார். உதயகுமார் இதற்கு முன்னர் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை எப்படி புகழ்ந்தாரோ அதே போல்தான் எடப்பாடி பழனிச்சாமியை தாயுள்ளத்துடன் அரவணைப்பதாக நேற்று முன் தினம் புகழ்ந்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் அதிருப்தியில் ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் உள்ளனர். இதற்கு 4 காரணங்கள் உள்ளன. 1. இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதவியே அதிமுகவில் இல்லை, 2. கிளைச் செயலாளராக இருந்து பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதாக சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும என தனக்காக விதியை மாற்றிக் கொண்டார். அதாவது கட்சிக்கு தலைவராக இருக்க வேண்டுமே தவிர, தலைவருக்கு தகுந்த மாறி கட்சியை மாற்றக் கூடாது.
3. 5 ஆண்டு காலம் தலைமை நிலைய பொறுப்பில் இருக்க வேண்டும் . 4. அதிமுக ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி, ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஜாதிய தலைவரை போல் நடந்து கொள்கிறார். பாமக தலைவர் ராமதாஸை போல் செயல்படுகிறார். அனைத்து ஜாதியினருக்கும் பொதுவானவராக இல்லை. இந்த 4 காரணங்களால் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் உள்ளார்கள்.
எடப்பாடி பழனிச்சாமியை அனைத்து மாவட்ட, ஜாதியை சேர்ந்த பொதுக் குழு உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ததாக சொல்கிறீர்கள். ஆனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் செல்லாது என்று எப்போது அறிவிக்கப்பட்டதோ அப்போதே பொதுக் குழு உறுப்பினர்களின் தேர்வுகளும் செல்லாது. அதிமுகவை யாரும் கைப்பற்றிவிடக்கூடாது என்பதற்காகததான் அனைத்து தொண்டர்களாலும் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என எம்ஜிஆர் ஒரு விதியை கொண்டு வந்தார்.
எம்ஜிஆர் தனது உயில் என்ன எழுதியுள்ளார் என்றால் எந்த தலைவரை அதிமுகவில் உள்ள 80 சதவீதம் பேர் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர் தலைமையில் இயங்க வேண்டும். தனது சொத்துகளிலிருந்து வரும் வருமானத்தை கட்சி செலவுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதுதான்! அதன்படி எடப்பாடி பழனிச்சாமி நடந்து கொள்ளவில்லை என்பதுதான் எனது குற்றச்சாட்டு என கே சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்த முழு வீடியோவை இந்த செய்தியில் இணைத்துள்ள யூடியூப் லிங்கில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications