கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு..இறுதி அறிக்கை எப்போது? சிபிசிஐடி பரபர தகவல்!
சென்னை : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை முடிந்துவிட்டதாகவும், மாணவியின் செல்போன் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 4 வாரங்களில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார்.
இந்த நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜிப்மர் மருத்துவக்குழுவின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்கக்கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு மாணவியின் தந்தை ராமலிங்கத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

கனியாமூர் பள்ளி மாணவி
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மரணமடைந்தார். அவரது மரணம் தற்கொலையா?, கொலையா? என்கிற சந்தேகம் எழுந்ததை அடுத்து, தனியார் பள்ளிக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையை முறையாக நடத்தக் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மாணவியின் செல்போன்
இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது. மாணவி பயன்படுத்திய செல்போனை பலமுறை சம்மன் அனுப்பி கேட்டும் வழங்கவில்லை என காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதற்கு நீதிபதிகள் உடனடியாக செல்போனை வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் பெற்றோரிடம் விசாரணை நடத்த உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்திருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாணவியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர் சுப்பு, மாணவி பயன்படுத்திய செல்போன் ஜனவரி 20-ம் தேதி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

தடயவியல் அறிக்கை
மேலும் ஜிப்மர் மருத்துவக்குழு நடத்திய பிரேத பரிசோதனை அறிக்கை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறினார். இதனையடுத்து விசாரணையின் தற்போதைய நிலை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் தாக்கல் செய்தார். மேலும் மாணவி பயன்படுத்திய செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். மற்ற விசாரணை நிறைவடைந்தது என்றும் தெரிவித்தார்.

ஒரு மாதத்தில்
மேலும், தடயவியல் அறிக்கை கிடைத்தவுடன் ஒரு மாதத்தில் விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து ஜிப்மர் மருத்துவக்குழுவின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்கக்கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரர் ராமலிங்கத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications