இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.. கொதிக்குதடா நெஞ்சம்.. கமல்
சென்னை: நீட் தேர்வு பயத்தால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கொதித்துப்போன மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நீட் தேர்வை வணிக நாடகம் என்று கடுமையாக விமர்சித்துள்ளதுடன், இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், மேட்டூர், கூழையூரைச் சேர்ந்த விவசா சிவக்குமார் என்பவரது இரண்டாவது மகன் தனுஷ் ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்தார்.
இந்நிலையில இந்த முறை நீட் தேர்விற்கு முழுமையாக தயாராகாமல், அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டு, இந்தமுறையும் தோல்வி அடைந்தால் தனது மருத்துவர் கனவு கலைந்துவிடுமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் .
இதேபோல் அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் கனிமொழி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மார்க் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவி கனிமொழி நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ளார்.

அதிர்ச்சி
இந்நிலையில் நீட் தேர்வு கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை என தந்தையிடம் கூறி மன உளைச்சலில் இருந்த மகளை தந்தை தேற்றியுள்ளார் எனினும் மருத்துவ கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நேற்று முன்தினம் தனிமையில் வீட்டில் இருந்த கனிமொழி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இரண்டு சம்பவங்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீட் விலக்கு
ஏற்கனவே நீட்தேர்வு காரணமாக அனிதா உள்பட 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கடந்த சில ஆண்டுகளாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தில் திமுக அதிமுக, பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. நீட் தேர்வு விலக்கு சாத்தியமில்லை என்றும் பாஜகவும், நீட் தேர்வு விலக்கை கொண்டுவருவதாக திமுக பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தாக அதிமுகவும் குற்றம்சாட்டி உள்ளன.

அதிமுக மீது தாக்கு
அதேநேரம் ஆளும் கட்சியான திமுகவோ, அதிமுக மற்றும் பாஜக தான் நீட் தேர்வுக்கு காரணம் என்றும், சிஏஏ, வேளாண் சட்டங்களை அதிமுக ஆதரிக்க வேண்டிய நிலை வந்த போது, நீட் விலக்கு கேட்டு பாஜகவிற்கு நிபந்தனை விதித்து இருக்கலாம் என்றும் அதை அதிமுக செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டுகிறது. மேலும் நீட் தேர்வுக்கு எதிராக புதிய தீர்மானத்தை திமுக அரசு நிறைவேற்றி உள்ளது.
Recommended Video

வணிக நாடகம்
இந்நிலையில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!" என்று கூறியுள்ளார். முன்னதாக கமல் வெளியிட்டிருந்த ட்வீட் பதிவில் ஓர் அநீதியான தேர்வை இன்று (ஞாயிறு) 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?! என்று கேள்வி எழுப்பி இருந்தார்












Click it and Unblock the Notifications