எப்படி செய்து முடித்தார்?.. "ஆபரேஷன் சென்னை".. பார்த்து பார்த்து களமிறக்கிய கமல்.. பக்காவான பிளான்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டு இருக்கும் வேட்பாளர்கள் பட்டியல் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது... அதிலும் இவர் சென்னைக்காக களமிறக்கி இருக்கும் நபர்கள் மிக சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக நேற்று அதிமுக, பாமக இரண்டும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. அதே சமயத்தில் மக்கள் நீதி மய்யமும் இன்னொரு பக்கம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
மக்கள் நீதி மய்யம் இந்த சட்டசபை தேர்தலுக்காக மூன்றாவது அணியை அமைத்து வருகிறது. இந்த கூட்டணியில் ஐஜேகே, சமகவிற்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஸ்டிபிஐ கட்சிக்கு 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

போட்டி
இதனால் மீதமுள்ள 136 இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. இதில் நேற்று மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 70 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிகம் படித்தவர்கள், களப்பணியாளர்கள், முன்னாள் அரசியல் தலைவர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள் என்று பார்த்து பார்த்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களையே தேர்வு செய்துள்ளது.

சென்னை
மொத்தமாக மநீம கட்சியின் வேட்பாளர் பட்டியல் சிறப்பாக இருந்தாலும் சென்னைக்கு என்று அந்த கட்சி தனியாக பிளான் செய்து இருக்கிறது. இதில் சென்னைக்காக கமல் இறக்கி இருக்கும் வேட்பாளர்கள் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளனர். தமிழகம் முழுக்க இந்த தேர்தலிலேயே கால் பதித்து மக்கள் நீதி மய்யத்திற்கு கஷ்டம். அதனால் சென்னையில் எப்படியாவது அதிக இடங்களை பிடிக்கும் திட்டத்தில் அக்கட்சி இருக்கிறது.

சென்னை தொகுதிகள்
சென்னையில் 4-5 இடங்களை பிடித்தால் கூட அது கெத்துதான். கட்சியை வேகமாக வளர்க்க இது உதவியாக இருக்கும். இதனால் கட்சியிலும், மக்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கும் தலைவர்களை, வேட்பாளர்களை சென்னையில் கமல்ஹாசன் களமிறக்கி உள்ளார். முக்கியமாக பெண் வேட்பாளர்களுக்கு சென்னையில் கமல்ஹாசன் அதிகமாக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

பெண் வேட்பாளர்கள்
சென்னைக்கும் என்று தனியாக திட்டங்களை இவர் வகுத்து இருப்பது வேட்பாளர் தேர்வில் இருந்து தெரிய வருகிறது. தேடிதேடி கமல்ஹாசன் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார். விருகம்பாக்கம்-பாடல் ஆசிரியர் சினேகன், சைதாப்பேட்டை-சினேகா மோகன்ஸ்தாஸ், பல்லாவரம்- செந்தில் ஆறுமுகம், மாதவரம்-ரமேஷ்கொண்டலசாமி,எழும்பூர்-பிரியதர்சினி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

வேறு எங்கு
அதேபோல் அண்ணாநகர்-அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், மதுரவாயல்-பத்மபிரியா, ஆர்.கே.நகர்-பாசில், பெரம்பூர்-பொன்னுசாமி, வில்லிவாக்கம்-முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு, தாம்பரம்-சிவ இளங்கோ, திருப்போரூர்-லாவண்யா, ஆகியோர் களமிறக்கப்பட உள்ளனர் . சென்னைக்கு என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், மக்கள் போராளிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

யார் எல்லாம்
மதுரவாயலில் போட்டியிடுபவர் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை எதிர்த்து பேசிய யூடியூபர் பத்மப்ரியா, இது போக சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு, திருப்போரூர் லாவண்யா, எழும்பூர் பிரியதர்சினி என்று மக்களுக்கு பரிட்சயம் உள்ள, பல சமூக பணிகளை செய்த வேட்பாளர்களை கமல்ஹாசன் களமிறக்கி உள்ளார்.

சமூக பணி
கமல்ஹாசனின் இந்த தேர்வு அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாகிவிட்டார் என்பதை காட்டுகிறது. எப்படி இவ்வளவு சிறப்பான வேட்பாளர்களை கண்டுபிடித்தார் என்று மற்ற கட்சிகள் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த வேட்பாளர் பட்டியல் அமைந்துள்ளது. இவர்கள் தேர்தலில் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக களத்தில் டப் போட்டியாளர்களாக இருப்பார்கள்.












Click it and Unblock the Notifications