தமிழகத்தை தாண்டி புதுவையிலும்.. கமலின் ஸ்மார்ட் மூவ்.. மூக்கு மீது விரல் வைக்கும் பிற கட்சிகள்!
சென்னை: தமிழகத்தைத் தாண்டி புதுவையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது மக்கள் நீதி மய்யம் கட்சி. கமல்ஹாசனின் நல்ல அணுகுமுறையை பார்த்து மற்ற கட்சிகளும் ஆச்சரியத்தில் உள்ளன.
கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கமல்ஹாசன் மதுரையில் தொடங்கி வைத்தார். அந்த கட்சி அடுத்த ஆண்டு 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 37 தொகுதிகளில் போட்டியிட்டது.
இதில் தமிழகத்தில் மொத்தம் பதிவான 4.20 கோடியில் அக்கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 1.61 கோடியாகும். தேர்தலில் தோல்வியை கண்டாலும் அக்கட்சியின் ஒட்டுமொத்த வாக்கு சதவீதம் என பார்த்தால் 5 சதவீதம் ஆகும். தொகுதி வாரியாக பார்த்தால் ஸ்ரீபெரும்புதூர், வடசென்னை, கோவை, குமரி உள்ளிட்ட தொகுதிகளில் நல்ல வாக்கு சதவீதத்தை அக்கட்சி பெற்றுள்ளது.
எதிர்பார்ப்பு
8.5 சதவீதம் முதல் 12.5 சதவீதம் வரை வாக்குகளை பிரித்திருந்தது. இந்த நிலையில் வரும் தமிழக சட்டசபை தேர்தலில் இக்கட்சி மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்சிகள் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை கூட்டணிக்கு அழைத்து வருகின்றன. ஆனால் கமல்ஹாசனோ அதிமுக, திமுக என எந்த கட்சியின் அழைப்பையும் ஏற்கவில்லை.
கமல்
3ஆவது அணியை உருவாக்கும் முயற்சியில் கமல் ஈடுபட்டு வருகிறார். அந்த அணியின் முதல்வர் வேட்பாளரும் கமல்ஹாசன்தான். நாடாளுமன்றத் தேர்தலை காட்டிலும் தற்போது கமலின் செல்வாக்கு விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அவரது தேர்தல் பிரச்சாரங்கள் மக்கள் மனதில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
சட்டசபைத் தேர்தல்
இந்த நிலையில் அதிமுக, திமுக என யார் விரித்த வலைகளிலும் சிக்காமல் கமல்ஹாசன் தனித்தோ இல்லை 3ஆவது அணியாகவோ போட்டியிடும் தில்லான முடிவை எடுத்துள்ளார். இந்த சட்டசபைத் தேர்தலில் அவரது வாக்கு வங்கி மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேர்மையான மக்களுக்கான ஒரு மாற்றம் என்ற லட்சியத்துடன் கமல்ஹாசன் பயணித்து வருகிறார்.
பெரும் தாக்கம்
தமிழகத்தை தாண்டி தற்போது புதுவையிலும் அவரது வளர்ச்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. பாஜகவுடன் என் ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைக்க திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக நமச்சிவாயம் (காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்) அறிவிக்கப்பட்டார். இதனால் என் ஆர் காங்கிரஸ் கட்சி அதிருப்தி அடைந்து வருகிறது.
திமுகவுடன் கூட்டணி
இதையடுத்து என் ஆர் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. இதனால் தனது தலைமையில் கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம் என்ற முனைப்புடன் செயல்படுகிறது. என் ஆர் காங்கிரஸ். இதை கமல்ஹாசன் மிகவும் அழகாக பயன்படுத்திக் கொள்கிறார். நேற்றைய தினம் என் ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்காக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் கிடைத்தன.
கமல்ஹாசன்
அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள கமல்ஹாசன் இந்த கட்சிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு என் ஆர் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முற்படுகிறார். ஒரு வேளை இந்த கூட்டணி அமைந்து வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் தனது வாக்கு வங்கி மற்றும் தில் மூவ் மூலம் மக்கள் நீதி மய்யம் அசுர வளர்ச்சி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.