'பூனைக்குட்டி' வெளியே வந்து விட்டது..திமுகவின் 'பி டீம்' கமல்..போட்டு தாக்கும் ஜெயக்குமார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கமல்ஹாசன் கூறியுள்ளதால் அவரை திமுகவின் பி டீம் என்று ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கமல்ஹாசன் கூறியதை அடுத்து பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்று உறுதியாகியுள்ளதாக ஜெயக்குமார் கூறியுள்ளார். திமுகவின் பி டீம்
கமல்ஹாசன் என்பது உறுதியாகியுள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேர்தல் பணிக்குழுவை அறிவித்து பிரச்சாரத்தை திமுகவும் கூட்டணி கட்சியினரும் தொடங்கி விட்டனர். தேமுதிகவும் தனித்து களமிறங்குகிறது. வேட்பாளர் பெயரை அறிவித்து களப்பணிகளை தேமுதிக தொடங்கி விட்டது.
அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளுமே களமிறங்குகின்றன. வேட்பாளர் யார் என்று இன்னமும் அறிவிக்கவில்லை. பாஜகவோ கூட்டணிக்கு தலைமை அதிமுகதான் என்று கூறி போட்டியிடாமல் பின் வாங்கி விட்டது.
கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார். தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதிமய்யம் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது. பெரியாரின் பேரனும் தனது நண்பருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தருவதாக கூறியுள்ளார் கமல்ஹாசன்.
இந்த ஆதரவு நிலை குறித்து அதிமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், எத்தனை பேர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தாலும் மக்கள் புரட்சியை தடுக்க முடியாது என்று கூறினார். திமுக அரசுக்கு எதிர்ப்பு அலை வீசுவதாகவும் ஜெயக்குமார் கூறினார்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்ததன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்று கூறினார். இதன் மூலம் திமுகவின் பி டீம் கமல் ஹாசன் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.