பாஜக.. அதிமுக.. திமுக.. எல்லோரையும் சரமாரியாக விமர்சித்த கமல்ஹாசன்.. புதிய விஸ்வரூபம்!
நேற்று திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தில் இருக்கும் முக்கிய கட்சிகள் அனைத்தையும் மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.
Recommended Video

சென்னை: நேற்று திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தில் இருக்கும் முக்கிய கட்சிகள் அனைத்தையும் மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.
நேற்று மக்கள் நீதி மய்யம் சார்பாக திருநெல்வேலியில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் தொடங்கி 1 வருடம் ஆனதை அடுத்து இந்த விழா நடைபெற்றது.
இதில் பேசிய கமல்ஹாசன், மகாத்மா காந்தியில் இருந்து தன்னுடைய பேச்சை தொடங்கினார். அதே சமயம் அனைத்து கட்சிகளையும் இவர் தனது பேச்சில் சரமாரியாக விமர்சனம் செய்தார்.

அதிமுக விமர்சனம்
அதிமுகவை விமர்சனம் செய்த கமல்ஹாசன் ''தூத்துக்குடியில் நம் வாயில் சுட்டார்கள் மறக்க வேண்டாம். கேள்வி கேட்டதற்காக வாயில் சுட்டார்கள். இந்த அரசு கொள்ளையடிக்கிறது. இவர்களுக்கு விரைவில் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும்'' என்று மிக கடுமையான விமர்சனங்களை வைத்து இருந்தார்.

திமுக மீது விமர்சனம்
அதேபோல் திமுக கூட்டணியில் சேருவது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மறைமுகமாக விமர்சனம் செய்தார். அதில் ''நான் யாருடனும் கூட்டணி வைக்க விரும்பவில்லை. நான் யாரிடமும் சீட் கேட்டு நிற்கவில்லை. எனக்கு எதற்கு சீட். தனியாக இறங்கி அடிக்க போறவனுக்கு எதற்கு சீட் என்று சொல்லுங்கள். நான் இறங்கி அடிப்பேன்'' என்று திமுகவை மறைமுகமாக கிண்டல் செய்து இருந்தார்.

பாஜக விமர்சனம்
அதேபோல் பாஜக மீது விமர்சனம் வைத்த அவர் ''என்னை பார்த்து பாஜகவின் பீ டீம் என்று கெட்டவார்த்தை பேசுகிறார்கள். என்னை பாஜகவின் பீ டீம் என்று சொல்லி அவமானப்படுத்த வேண்டாம். இது போன்ற கெட்டவார்த்தைகளை பேச வேண்டாம். அப்படி நீங்கள் பேசினால் எனக்கு கடும் கோபம் வரும். நான் யாருடைய பீ டீமும் இல்லை, மக்களின் டீம்.'' என்று பாஜகவையும் கலாய்த்தார்.

கமல் விஸ்வரூபம்
நேற்றைய பொதுக்கூட்டம் மூலம் கமல்ஹாசன் அரசியலில் புதிய விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். இதுவரை மிகவும் மிதமான அரசியல் செய்து வந்த கமல்ஹாசன் தற்போது அதிரடி அரசியலில் இறங்கி இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. லோக்சபா தேர்தலை சந்திக்க கமல்ஹாசன் தயாராகிவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.












Click it and Unblock the Notifications