ஆர்.என்.ரவி பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? பாஜக தலைவராகவா? டேட்டாவுடன் விமர்சித்த கனிமொழி
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா? என்று திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருக்கிறது ஆளுநர் ரவி விமர்சித்த நிலையில், தமிழ்நாட்டின் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் என்று பழி போடுவதாக கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம் நடந்து வருகிறது. கஞ்சா உட்பட ரசாயன போதைப்பொருள் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசுப் பள்ளிகளில் கல்விக் சூழல் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
அதேபோல் பொதுப்பாதையை பயன்படுத்தும் பட்டியலின மக்கள் தாக்கப்படுகின்றனர். சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாகியும், சாதிய பாகுபாடு நிலவுகிறது என்பது நாம் அவமானப்பட வேண்டிய ஒன்று. தமிழ் மொழியும், கலாச்சார மரபும் தேசத்தின் பெருமை. தமிழ் மொழி, தமிழ் மரபு, தமிழ்க் கலாச்சாரத்தின் மிகப்பெரும் அபிமானி பிரதமர் மோடி என்று தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சிற்கு திமுக தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான்.
மூன்றுமே பாஜக ஆளும் மாநிலங்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. இருந்தாலும் பட்டியலில் பத்து இடங்களுக்குள் கூட வராத தமிழ்நாட்டின் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் என்று பழி போடும் ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பு ஏற்றுக்கொண்டதில் இருந்தே, அவருக்கும் தமிழக அரசுக்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறி வருகிறார். சட்டசபைத் தேர்தலுக்கு 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், மீண்டும் தமிழக அரசு vs ஆளுநர் இடையில் மோதல் அதிகரித்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications