கருணாநிதியின் அம்மா பாரபட்சமாக பரிமாறுவார்.. கண்ணீர் வழிய புகார் சொன்ன அந்த வி.வி.ஐ.பி!
சென்னை: இயல்பில் கருணாநிதிக்கு தன்னை பெற்ற அம்மா அஞ்சுகத்தின் மீது அப்படியொரு பாசம். கட்சியிலும் சரி, தேர்தலிலும் சரி, ஆட்சியிலும் சரி, அவர் உச்சம் வெற்றி பெற்ற போதும், தோல்வியை சந்தித்த போதும் மனதார நன்றி சொல்வதும், மனம் அதிர ஆறுதல் தேடுவதும் அம்மா அஞ்சுகத்தின் நினைவுகளில்தான்.
கருணாநிதியின் முதல் நினைவு நாளான இன்று அவரது அம்மா அஞ்சுகம் பற்றிய சில நினைவலைகள், தகவல்கள் இங்கு....
"என் அம்மா அஞ்சுகம் மறைந்தபோது நண்பர்கள், அரசியல் தலைவர்கள், கலை உலகினர் பெரிதும் வருந்தினர், எனக்கு பேராறுதல் கூறினர். ஆனால் என் அம்மா என்னைவிட்டு அகன்றதாக நான் நினைக்கவேயில்லை. நிலைக்கண்ணாடி முன் நான் நின்று சிரித்தால், என் அம்மாவின் பொக்கைவாய் சிரிப்புதான் அதில் தெரியும். என் அம்மா என்னைவிட்டு பிரிந்ததாக நான் நினைப்பதேயில்லை, காரணம், என்னைப் பிரிய அவளுக்கு மனம் வராது என்பதால்தான்." - என்று கருணாநிதி எழுதியிருக்கிறார்.
கருணாநிதியின் அம்மா அஞ்சுகம் பற்றி அண்ணா....
"மூதாட்டி அஞ்சுகம் போல் ஒரு அன்னையை கண்டதில்லை. இயக்கம் பற்றிய செய்திகளை, இயக்கத்தின் வெற்றிகளை கேட்டதும் ஆனந்தப்படுவார். 'விலைவாசியை குறைக்க எப்போ நடக்கப்போவுது கிளர்ச்சி? இன்னக்கி பேப்பர்ல நம்ம கட்சி பற்றி என்ன சேதி வந்திருக்குது?' என்று சளைக்காமல் இயக்கம் பற்றியே பேசும் ஒரு தாய் அவர். நடமாடிக் கொண்டிருந்த அஞ்சுகம் அம்மா, படமாகிப் போனது வேதனை.
கருணாநிதி, மாறன், அமிர்தம், செல்வம் என எல்லோரும் அந்த அம்மாவின் மறைவினால் கதறிக் கதறி அழுகிறார்கள். காரணம், அவர்கள் இழந்தது அன்னையை மட்டுமல்ல, அன்பை." என்று.
கருணாநிதியாலேயே 'மக்கள் திலகம்' என்று வர்ணிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். இப்படி எழுதுகிறார்..."என்னைப் பார்த்தவுடன் 'தம்பி வா' என்று பாசமாக அழைப்பார். பேச உட்கார்ந்தால், வீட்டு விசேஷங்களில் இருந்து தொழில், அரசியல், என எல்லாமே பேசுமளவுக்கு அறிவு. இன்பம், நட்பு, வாழ்க்கை துணை, மக்கட் செல்வம் என எதை இழந்தாலும் மறுபடி பெறலாம் ஆனால் அன்னையை? அதிலும் அஞ்சுகம் போன்றொரு அன்னையை இழந்தால் அதை தாங்கிக் கொள்வது அசாதாரணம். நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. வாழ்க தாய்மை உணர்ச்சி! வளர்க அஞ்சுகம் அம்மையாரின் அன்புள்ளம்!" - என்று நெகிழ்ந்திருக்கிறார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இப்படி நினைவு கூறுகிறார்.. "நான் 'மூனா கானா' என்று இனிமையோடும், அன்போடும் அழைக்கும் நண்பர் என் திரு.மு. கருணாநிதிதான். என்னை அவரது அம்மா 'எங்கள் வீட்டு செல்லப்பிள்ளை நீ' என்றார். இது எவ்வளவு பெரிய பாக்கியம் எனக்கு? அந்த தாய் இன்று இல்லை.
அஞ்சுகத்தாய் இறந்த சேதி கேட்டு விரைந்து சென்றேன். என்னைக் காணவோ, பேசவோ விரும்பாதது போல் படுத்திருந்தது அந்த அன்னை. நான் அழுதேன், தேம்பித் தேம்பி அழுதேன். பின்னர் நானும் கருணாநிதியும் கட்டிக் கொண்டு அழுதோம். அந்த அம்மாவின் கைகளால் பல முறை இருவரும் ஒன்றாக உண்டிருக்கிறேன்.
சில நேரங்களில் பாரபட்சமாக எங்கள் இருவருக்கும் பரிமாறுவார். அதாவது நல்ல பண்டங்களை எனக்கு அதிகமாகவும், தன் மகனுக்கு குறைவாகவும் வைப்பார். 'இது நியாயமா? இப்படிச் செய்யலமா?' என்று நான் கேட்டால்...'நீ எங்கள் வீட்டுச் செல்லப்பிள்ளை. உனக்கு அதிகம்தான்' என்பார். எனக்கு அஞ்சுகம் அம்மையாரும் ஒரு தாய், என்னை பெற்ற தாய்க்கு நிகரானவர் அவர்." என்று
இப்படியாக கருணாநிதியின் உயிராக இருந்த அவரது அம்மா அஞ்சுகம் பற்றி, கண்ணீர் வழிய வழிய எழுதிய, பேசிய வி.வி.ஐ.பி.க்களின் பட்டியல் நீள்கிறது.
இப்போது புரிகிறதா, தி.மு.க. ஒரு 'குடும்ப கட்சி'தான் என்று!
- ஜி.தாமிரா