கரூர் கூட்ட நெரிசல்.. ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என பேசிய அஜித்.. உதயநிதி கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு தனி நபர் ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என்று நடிகர் அஜித்குமார் பேசியிருந்தார். அஜித்குமார் கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் இது பற்றி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கரூர் கூட்ட நெரிசல்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு தனிநபர் மட்டுமே பொறுப்பேற்க முடியாது என்று கூறினார். நடிகர் அஜித் குமார் கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அஜித் சொன்னதை அவருடைய சொந்த கருத்து தான் பாராட்டத்தக்கது தான் என்று கூறினார்.
கே என் நேரு சொல்லிவிட்டார்
உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:- சம்பந்தப்பட்ட அமைச்சர் கே என் நேரு இதற்கு முறையான பதிலை தெரிவித்துள்ளார். பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார்கள். இதை நாங்கள் சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறோம்.
நடிகர் அஜித்குமார் கரூர் சம்பவத்துக்கு தனிப்பட்ட நபர் மட்டுமே பொறுப்பு கிடையாது என பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின் இதற்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டாங்க..
முழுமையாக பார்க்கவில்லை
நானும் இது பற்றி பேட்டி கொடுத்துவிட்டேன். இதற்கு முறையாக யார் பேட்டி கொடுக்கனுமோ அவர் இன்னும் கொடுக்கவில்லை. அவர் இன்னும் பேட்டிகொடுக்க விரும்பவில்லையோ என தெரியவில்லை. சிபிஐ விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. எனவே அது பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
அஜித் குமார் வீடியோவை இன்னும் நான் முழுமையாக பார்க்கவில்லை. கொஞ்சம், கொஞ்சம் தான் பார்த்தேன். எனவே இது பற்றி கருத்து கூற விரும்பவில்லை. முழுமையாக நான் பார்த்துவிட்டு இது பற்றி நான் கருத்து சொல்கிறேன். அவர் சொன்னது அவருடைய சொந்த கருத்து. அது எந்த கருத்தாக இருந்தாலும் பாராட்டத்தக்கது தான். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications