"பாப்பாவை பார்த்துக்கோங்க மா"... கரூர் வீடியோ காலில் எமோஷனலான விஜய்
கரூர்: தவெக விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் உயிரிழந்த சோகம் இன்னும் ஓயவில்லை. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, தவெகவை தவிர மற்ற அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று ஆறுதல் கூறி தங்களால் முடிந்த நிவாரணம் அளித்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற 11வது நாளான இன்று தான் விஜய், அந்த மக்களிடம் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் என்ன கூறினார் என்று அவர்கள் பேட்டியளித்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாவட்டம் வாரியாக பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அதன்படி கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 மக்கள் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது..

தவெக கூட்டத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று தவெக தரப்பில் புகார் கூறப்பட்டது. ஏன் கரூரில் மட்டும் இந்த பிரச்சனை ஆனது. முதலமைச்சருக்கு பழிவாங்க வேண்டும் என்றால் என்னை கைது செய்து கொள்ளட்டும் என்று விஜயும் கூறியிருந்தார். இந்த சம்பவத்தில் தவெக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவில்லை. என்ற புகாரும் எழுந்தது.
சம்பவம் நடைபெற்று இன்றுடன் 10 நாட்களாகிவிட்டன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியினரும் கரூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள். தவெகவில் விஜயோ அல்லது அந்தக் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் கூட கரூர் சென்று மக்களை சந்திக்கவில்லை. இந்நிலையில், இன்று விஜய் வீடியோ கால் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
இதுகுறித்து சங்கவி என்ற பெண் கூறுகையில், "என் கணவர் ரமேஷ் கூட்டத்தில் உயிரிழந்தார். நேற்று மாலை விஜய் என்னிடம் வீடியோ காலில் பேசினார். "எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன். நீதிமன்ற வழக்கு முடிந்த, அனுமதி கிடைத்த பிறகு நேரில் வருகிறேன்.' என்றார். எனக்கு விஜய் மீது வருத்தமில்லை. கூட்டம் வரும்போது அதிக பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அதிக கூட்டம் வருவதற்கு விஜய் என்ன செய்ய முடியும்."
சுமதி என்ற பெண் கூறுகையில், "விஜய் என்னிடம் 'அம்மா.,. பாப்பாவை பார்த்துக்கோங்க.. பையனை பார்த்துக்கோங்க. எதுவாக இருந்தாலும் எங்களுக்கு போன் செய்யுங்கள்.' என்று நம்பர் கொடுத்தார். விரைவில் நேரில் வருகிறேன். என ஆறுதல் கூறினார்". என்றார்.
விஜய் வீடியோ காலில் பேசிய மற்றொரு ஆண் கூறுகையில், "நேற்றைக்கு ஒரு 11 மணிக்கு தவெகவில் இருந்து 9 பேர் வீட்டுக்கு வந்தார்கள். மாநில பொறுப்பில் இருப்பதாக கூறினார்கள். துக்கம் பற்றி விசாரித்துவிட்டு தளபதி பேசுவார் என விஜய்யிடம் வீடியோ கால் செய்து கொடுத்தனர். விஜய், 'நான் ரொம்ப வருத்தப்படறேன். இது ஈடு செய்ய முடியாது. நிச்சயமா நான் இருக்கேன். விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன்.' என்றார். வேறு எதுவும் கூறவில்லை. " என்றார்.












Click it and Unblock the Notifications