’காளிமுத்து பேரன்..செந்தமிழனின் மாவீரன்’..! சீமான் மகனை நெகிழ்ந்து பாராட்டிய வைரமுத்து! என்ன காரணம்?
சென்னை : தான் கடந்த 2019ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட 'தமிழாற்றுப் படை' நூலை படிக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகன் மாவீரனை பாராட்டி கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றினை எழுதியுள்ளார்.

தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களில் வைரமுத்து மிகவும் முக்கியமானவர். இதுவரை 7500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள அவர், சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 7 முறை பெற்றுள்ளார்.
திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது நாவல்கள் கவிதைத் தொகுப்புகள் மூலம் மிகவும் பிரபலமானவர் கவிஞர் வைரமுத்து.

இந்நிலையில் 2019 ஜூலையில் வைரமுத்து 'தமிழாற்றுப் படை' என்ற நூலை வெளியிட்டார். மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழின் பெருமையை விளக்கும் வகையில் வைரமுத்து அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட இந்நூல் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. புத்தகத்தைப் படித்த ரஜினிகாந்த், வைரமுத்துவின் மதிப்பு 100 மடங்கு உயர்ந்துவிட்டதாகப் பாராட்டினார்.
இந்நிலையில் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை புத்தகத்தை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகன் மாவீரன் இந்த புத்தகத்தை படிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதன் பின்னணியில் பேசியிருந்த சீமான், ஐயா என் மகன் தமிழாற்றுப் படை நூலை புரட்டிப் புரட்டிப் படிப்பதை பாருங்கள் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தனது நூலை படிக்கும் சீமானின் மகனுக்காக வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றினை சீமான் வெளியிட்டுள்ள வீடியோவை இணைத்து பகிந்துள்ளார். அதில்,
"காளிமுத்து பேரன்
செந்தமிழன் சீமானின்
திருச்செல்வன் மாவீரன்
தமிழாற்றுப்படையோடு
உறவாடி விளையாடும்
ஒளிப்படங்கள் கண்டேன்
நாளையொரு பூமலர
நல்லதமிழ்த் தேன்சிதற
வாழையடி வாழையென
வளருமடா தமிழ்க்கூட்டம்
என்று வாய்விட்டுச்
சொல்லிக்கொண்டேன்
தமிழாற்றுப்படையோடும்
தமிழர் படையோடும்
வா மகனே!"
என பதிவிட்டுள்ளார். இதனை பலரும் பாராட்டி லைக் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications