கொலையாளிகள் விடுதலையாகலாம்... ஆனால் குற்றவாளிகளே... ராஜீவ் நினைவுநாளில் ஜோதிமணி உருக்கம்
சென்னை: ‛‛ராஜீவ் அன்பின் உருவம், ஆளுமையின் வடிவம். உங்களின் இழப்பு எங்களுக்கு மட்டுமல்ல தேசத்துக்கும் தான். கொலையாளிகள் விடுதலையாகலாம். ஆனால் அவர்கள் குற்றவாளிகளே'' என ராஜீவ் காந்தி நினைவுநாளில் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்பத்தூரில் 1991ம் ஆண்டு மே 21ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இது இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இன்று நினைவுநாள்
மே 21ம் தேதியான இன்று ராஜீவ்காந்திக்கு 31வது நினைவுநாளாகும். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
ராகுல்காந்தி டுவிட்
இந்நிலையில் தனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார், அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது. அவர் ஒரு இரக்கமுள்ள, கனிவான மனிதராக திகழ்ந்தார். எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை. எங்களுக்கு மன்னிப்பு மற்றும் பச்சாதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தவர். நான் அவரை மிகவும் இழக்கிறேன், நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன்" என்று அதில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
ஜோதிமணி எம்பி உருக்கம்
இதேபோல் ஏராளமான காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராஜீவ் காந்திக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இன்றைய நவீன தொழில்நுட்ப இந்தியா ராஜீவின் கனவு, தொலைநோக்கு. ராஜீவ் அன்பின் உருவம், ஆளுமையின் வடிவம், இந்தியாவின் பெருமை. இழப்பு எங்களுக்கு மட்டுமல்ல தேசத்திற்கும் தான். அவரது கொலையாளிகள் விடுதலையாகலாம். ஆனால் குற்றவாளிகளே. கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல'' என தெரிவித்துள்ளார்.
கொலையாளிகள் என கூறுவது ஏன்?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பபட்டு பரோலில் இருந்த பேரறிவாளனை கடந்த 2 நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர், மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் வரவேற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. வாயில் வெள்ளை துணிக்கட்டி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்நிலையில் தான் ஜோதிமணி எம்பி இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.