கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டை.. உள்ளாட்சி இடைத் தேர்தல் ரிசல்ட்டை பாருங்கள்: வேட்பாளர் பெருமிதம்
சென்னை: கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டை என்பதை உள்ளாட்சி இடைத்தேர்தல் வெற்றி உறுதி செய்திருப்பதாக, ஊராட்சி கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெற்ற ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் மூன்றாவது மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பதிவான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், அன்னூரிலுள்ள, தனியார் பள்ளியில் வைத்து எண்ணப்பட்டது.
இதில், திமுக வேட்பாளர் ஆனந்தன் 26,292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திமுக வேட்பாளர்
இதை திமுகவினர் கொண்டாடினர். பின்னர் பேட்டியளித்த ஆனந்தன், கொங்கு மண்டலம் மீண்டும் திமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் மக்கள் வாக்களித்துள்ளதாக தெரிவித்தார்.

கோட்டையான கொங்கு மண்டலம்
இதுகுறித்து அவர் கூறுகையில், கொங்கு மண்டலம் மீண்டும் திமுகவின் கோட்டை என்பது உறுதியாகியுள்ளது. கொங்கு மக்கள் திமுகவை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிற கட்சிகளுக்கு டெபாசிட் இல்லை
அதிமுக சார்பில் கருப்பசாமி 13251 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் மிக குறைந்த வாக்குகள் மட்டும் பெற்று டெபாசிட்டை இழந்தனர். திமுக வெற்றி பெற்றதை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

கோவை மாவட்டம்
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் கடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுக எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து கொங்கு மண்டலத்தில் திமுகவை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின். மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த மகேந்திரன் திமுகவில் சேர்க்கப்பட்டார். இன்னொரு பக்கம் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இது போன்ற விஷயங்கள் அதிமுகவுக்கு பின்னடைவையும், திமுகவுக்கு வெற்றி வாய்ப்பையும் தந்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications