காங்கிரஸ் டூ அதிமுக டூ திமுக: ஜெயா ஆதரவு.. 7 ஆண்டுகளில் மாறிய ‘இலை’வாசம்! கோவை செல்வராஜ் பாலிடிக்ஸ்!
சென்னை : அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 2015ஆம் ஆண்டு அதிமுகவிற்குச் சென்ற இவர் அடுத்த 7 ஆண்டுகளில் திமுகவிற்கு தாவியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ், முதல்வர் ஸ்டாலின் விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, கூட்டணிக் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியதால் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்ட கோவை செல்வராஜ், இன்று திமுகவிலேயே இணைந்துள்ளார்.
திமுக கரை வேட்டி கொடுத்து, அவரை கட்சிக்கு வரவேற்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின். உண்மையான அதிமுகவினர் அனைவரும் திராவிட ஆட்சியை நிலைநாட்டிட முதல்வரின் பாதையில் நடைபோட வேண்டும் என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்! அதிமுக மீது கடும் விமர்சனம்
அதிமுகவில் இருந்து வெளியேறிய செல்வராஜ்
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே தலைமை மோதல் தீவிரமாக எழுந்த நிலையில் ஓபிஎஸ் அணிக்காக களமாடி வந்தார் கோவை செல்வராஜ். கோவை செல்வராஜ், ஓபிஎஸ் அணியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகப்போவதாக கோவை செல்வராஜ் சமீபத்தில் அதிரடியாக அறிவித்தார். சுயநலத்திற்காக கட்சியை சிதைத்தவர்கள் என ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை குற்றம்சாட்டி அதிமுகவில் இருந்து வெளியேறினார் கோவை செல்வராஜ்.
ஜெயா காங்கிரஸ் எம்.எல்.ஏ
காங்கிரஸ் கட்சியில் இருந்த கோவை செல்வராஜ் கடந்த 1991 - 1996ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலகட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர். அப்போது, காங்கிரஸ் - அதிமுக கூட்டணி முறிந்த நிலையில், காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் ஜெயலலிதா ஆதரவாளராக மாறி, காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏவாக சட்டமன்றத்தில் செயல்பட்டார். ஜெயலலிதாவிற்கு ஆதரவாக அவர் செயல்பட்டதால் 'ஜெயா காங்கிரஸ் எம்.எல்.ஏ' என அப்போது அவர் விமர்சிக்கப்பட்டார்.
கோஷ்டி பூசல்
பின்னர் 2015ஆம் ஆண்டு வாக்கில் கோவை செல்வராஜ், காங்கிரஸ் சேவாதள அமைப்பின் மாநில அமைப்பாளராக செயல்பட்டு வந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான கோவை செல்வராஜ், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பொறுப்பு வகித்தபோது அவரைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார். மேலும், தமிழகத்தில் இளங்கோவன் தலைமையில் இருப்பது 'கருணாநிதி காங்கிரஸ்' என்றும் விமர்சனம் செய்தார்.
ஜெயலலிதா ஆதரவு
2015ஆம் ஆண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டபோது, காங்கிரஸ் கட்சி அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என வெளிப்படையாகவே பேசினார் கோவை செல்வராஜ். 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது, அதிமுகவுடன் இணைந்து வலுவான கூட்டணியை அமைக்க, நாம் இப்போதே அதிமுகவுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும், அதனால், ஜெயலலிதாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனப் பேசினார். கூட்டணியில் இருந்த திமுகவை விமர்சித்ததோடு, வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்றும் பேசியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் கோவை செல்வராஜ்.
அதிமுக செய்தித் தொடர்பாளர்
அதன்பிறகு ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்து செய்தித் தொடர்பாளர் ஆனார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அதிமுகவில் தொடர்ந்து வந்த கோவை செல்வராஜ், தேர்தல்களில் சீட் கேட்டும் கொடுக்கப்படவில்லை. இதனால், ஈபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்தார். அண்மையில் ஏற்பட்ட ஓபிஎஸ் ஈபிஎஸ் மோதலுக்குப் பிறகு தீவிரமாக ஓபிஎஸ் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தார். கோவை மாநகர் மாவட்ட செயலாளராக ஓபிஎஸ்ஸால் நியமிக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி தரப்பினரை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்த கோவை செல்வராஜ், தற்போது ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார்.
திமுகவில்
ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், "1971ல் எனது 14 வயதில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றிருக்கிறேன். இவ்வளவு நாட்கள் கழித்து தாய்க் கழகத்தில் இணைந்து செயல்பட வாய்ப்பளித்ததற்கு என்னுடைய நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சமூக நீதியின் காவலர் முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி செயல்பட வந்திருக்கிறோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி என்ற சுனாமி தமிழக மக்களை அழிவுப் பாதைக்கு அழைத்து சென்றது. சீரழிந்த தமிழகத்தை சீர்செய்து மக்களுக்கான ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார்.
உண்மையான அதிமுகவினர் வரவேண்டும்
கடந்த நான்கரை ஆண்டுகளாக அதிமுகவிற்கு வக்காளத்து வாங்கி பேசியதற்கு மக்களிடம் நான் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகள் வாழ்வில் முதல்வரும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் ஒளிவிளக்கை ஏற்றி வைத்திருக்கிறார்கள். இத்தகைய நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினை பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே கிடையாது. அதிமுக என்ற கட்சி தற்போது கம்பெனி ஆகி விட்டது. எனவே உண்மையான அதிமுகவினர் அனைவரும் திராவிட ஆட்சியை நிலைநாட்டிட முதல்வரின் பாதையில் நடைபோட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.