மதவெறி பதிவு! பாஜக கல்யாணராமன் மீதான குண்டாஸ் ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை : மதமோதலை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்து வந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருப்பவர் கல்யாணராமன். தொடர்ந்து சிறுபாண்மை சமூகங்களுக்கு எதிராக சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
இவர் கடந்த ஆண்டு கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக அவரை கைது செய்யக்கோரி இஸ்லாமிய அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தின.

முதல் குண்டாஸ்
இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் கல்யாணராமனை கைது செய்த காவல்துறை அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது. இந்த வழக்கில். அவரது ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டது. இந்த நிலையில் முதல் குண்டாஸ் ரத்து செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளிவந்த கல்யாணராமன் மீண்டும் ட்விட்டர் கணக்கு தொடங்கி சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

மீண்டும் கைதான கல்யாணராமன்
இந்த நிலையில், ட்விட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களை சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைகுரிய கருத்துகளை பதிவிட்டதாகக் கூறி கடந்த ஆண்டு அக்டோபர் 16ம் தேதி கல்யாணராமனை போலீசார் கைது செய்தனர். அப்போது கைது செய்ய வந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் கல்யாணராமனும் பாஜகவினரும் ஈடுபட்டனர்.

2 வது முறை பாய்ந்த குண்டாஸ்
கோபிநாத் என்பவர் அளித்த சைபர் கிரைமில் அளித்த புகாரின்பேரில், கல்யாணராமன் மீது 2 பிரிவுகளின் தமிழ்நாடு காவல்துறை கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் கைதான அவரை, அக்டோபர் 23 ஆம் தேதி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

கடலூர் சிறையில் அடைப்பு
முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் நிர்வாக காரணங்களுக்காக, கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார் கல்யாணராமன் . இதனிடையே கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சாந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குண்டாஸ் ரத்து
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் நக்கீரன் அடங்கிய அமர்வு, கல்யாணராமன் மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதேபோல் கல்யாணராமன் தனியாக தொடர்ந்த வழக்கை கடந்த மார்ச் 9 ஆம் தேதி விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா கல்யாணராமன் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா என கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications