கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தான் கவலைப்பட வேண்டும்.. தகவலின் அடிப்படையில் சோதனை.. சிடி ரவி பேச்சு
சென்னை: வருமான வரித்துறையினருக்குக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே சோதனை நடைபெறுவதாகவும் கருப்புப் பணம் வைத்துள்ளவர்கள் மட்டுமே இது குறித்துக் கவலைப்பட வேண்டும் என்றும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எ.வ. வேலுவிற்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டார்.
வருமான வரி சோதனை
ஒரு புறம் எ.வ. வேலுவிற்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தபோது, மறுபுறம் அவருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். எ.வ.வேலுவின் வீடு, கல்லூரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது.
திமுக குற்றச்சாட்டு
இருப்பினும், தோல்வி பயத்தால் அதிமுகவின் தூண்டுதலின் பெயரிலேயே இந்த வருமான வரி சோதனை நடைபெறுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி வருமான வரித்துறைக்குக் கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை நடைபெறுவதாகத் தெரிவித்தார்.
கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள்
இது குறித்து ஈரோட்டில் பேசிய அவர், வருமான வரித்துறை என்பது சுதந்திரமான ஒரு அமைப்பு என்றும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே வருமான வரித் துறை சோதனை மேற்கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். கருப்புப் பணம் வைத்துள்ளவர்கள் மட்டுமே வருமான வரித் துறையினரின் சோதனை குறித்துக் கவலைப்பட வேண்டும் என்றும் மற்றவர்கள் கவலை கொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி
கருத்துக்கணிப்புகள் வெறும் ஆரூடம் என்று குறிப்பிட்டவர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் திமுக வெல்லும் எனக் கருத்துக்கணிப்புகளில் கூறினார்கள் என்றும் அதேபோல இந்த முறைும் அதிமுகவே வெல்லும் என்றும் அவர் தெரவிதித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயி என்றும் ஸ்டாலின் குடும்ப அரசியலை முன்னெடுப்பவர் என்று தெரிவித்த சி.டி. ரவி தமிழக மக்கள் ஆராய்ந்து, சரியான நபர்களுக்கு வாக்களிப்பார்கள் என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி
மேலும் தமிழக மக்கள் மத்தியில் கோ பேக் மோடி என்ற பிரசாரம் மேற்கொள்ளப்பட்டாலும்கூட, தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவக் கல்லூரிகள், 12 ஸ்மார்ட் சிட்டி, முத்ரா கடன் திட்ன் என அதிக திட்டங்களைப் பிரதமர் மோடி வாரி வழங்கியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். ஜக்கி வாசுதேவ் கோயில்களைச் சீரமைப்போம் திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.