Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்ச்சை கருத்து சொன்னாலே கைது செய்யும் தமிழக காவல்துறை இர்பானை விட்டது ஏன்? மா.சு மனம் மாறியது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளங்களில் யாரேனும் கருத்து தெரிவித்தாலே அவர்களை வீடு தேடிப்போய் கைது செய்யும் காவல்துறை, யூடியூபர் இர்ஃபான் விவகாரத்தைப் புகார் பதியப்பட்டும் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கவனம் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து யூடியூபர் இர்ஃபான் மீது பாய்ந்துள்ளது. இவர் தனது குழந்தையின் தொப்புள் கொடியைக் கத்தரிக்கோல் கொண்டு அறுத்த விவகாரம் ஊடகங்களில் மிகப்பெரிய அளவுக்குச் சர்ச்சையைக் கிளப்பியது. இப்படி இர்ஃபான் சர்ச்சையில் சிக்கியது முதன்முறையல்ல. அவர் அதற்கு முன்பாகவே தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலின சோதனை செய்து வீடியோ வெளியிட்டது பெரிய அளவில் எதிர்ப்பை கிளப்பியது. ஆனால், அவரை துறை ரீதியாக அதற்கான மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோவை வெளியிட வேண்டும் என சுகாதாரத்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. அதனால் விவகாரம் அமைதியானது.

youtuber irfan ma subramanian

இந்தச் சர்ச்சையில் சிக்கி 6 மாதங்களைக் கடந்த நிலையில், இதுவரை இர்ஃபான் தனது செயல் குறித்து மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோவை கூட வெளியிடவே இல்லை. அப்படி இருந்தும் அவர் மீண்டும் தைரியமாக அறுவை சிகிச்சை அறைக்குள் பாதுகாப்பு இல்லாமல் சென்று தனது பிள்ளையின் தொப்புள் கொடியை அவரே கத்தரித்துள்ளார். அதுவே விதி மீறல். அதை அறிந்தும் வீடியோவாக அதை வெளியிட்டு மீண்டும் தான் திருந்தவே இல்லை என்பதை உலகிற்கு நிரூபித்திருந்தார்.

இவரது செயலை பலரும் அரசியல் சார்பு இல்லாமல் கண்டித்திருந்தனர். இந்த விவகாரம் குறித்து முதலில் அக்டோபர் 22ஆம் தேதி பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டார்கள். காவல்துறையிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி சுகாதாரத்துறை சார்பாகக் கடிதம் கொடுத்துள்ளோம்" என்று பேசி இருந்தார்.

youtuber irfan ma subramanian

பலரும் அவர் மீது கடுமையான நடவடிக்கை இருக்கும் என்றே நம்பினர். பொதுமக்கள் அனைவரின் கருத்தும் அதுவாகவே இருந்தது. ஆனால், அடுத்த முறை செய்தியாளர்களை மா. சுப்பிரமணியன் சந்தித்தபோது இர்ஃபான் விவகாரம் பற்றி கேள்வி எழுந்தது. அதற்கு மா.சு., "வெறும் நோட்டீஸ்தான் கொடுத்துள்ளோம். ஏற்கெனவே மருத்துவமனை மீது நடவடிக்கை எடுத்துவிட்டோம். இர்ஃபான் செய்தது ஒன்றும் கொலைக் குற்றம் இல்லை. அதற்காக மருத்துவமனை மீது நடவடிக்கை எடுத்துவிட்டோம். 40 ஆயிரம் அபராதம் விதித்துள்ளோம். 10 நாட்கள் மருத்துவமனை செயல்படாமல் மூட உத்தரவிட்டுவிட்டோம். இது ஒரு பெரிய விசயமா?" என்று கேட்டுவிட்டுச் சந்திப்பை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு வெளியேறிவிட்டார்.

இதற்கு முன்பே இர்ஃபான் பாலின அடையாளத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்ட விவகாரம் குறித்து மா.சு.வை செய்தியாளர்கள் கேள்விகளால் துளைத்தனர். அதற்கு அவர், "தமிழ்நாட்டில் மட்டும்தான் பாலின அடையாளத்தை முன்கூட்டியே ஸ்கேன் செய்வது பார்ப்பதற்கு தடை உள்ளது. துபாயில் அதற்கு எந்தத் தடையும் இல்லை. இர்ஃபான் துபாயில் போய்தான் பரிசோதனை செய்துள்ளார். அது தவறு என்றுதான் கடிதம் கொடுத்திருந்தோம். அதற்கு அவர் வருத்தமும் தெரிவித்திருந்தார். இங்கே அவர் பரிசோதனை செய்திருந்தால், அந்த பரிசோதனை நிலையத்தை மூடி உத்தரவிட்டிருப்போம். எனவே தவறு செய்த யாரையும் இந்த அரசு காப்பாற்ற முயற்சிக்காது" என்றார்.

ஆனால், பாலின அடையாளத்தைச் சோதனை செய்ததற்காக இர்ஃபான் கடந்த 6 மாதங்களைக் கடந்தும் ஒரு மன்னிப்பு வீடியோ வெளியிடவே இல்லை. சட்டப்படி விளக்கம் கேட்ட போது, வழக்கறிஞர் கனகராஜ், "இந்தியாவைப் பொறுத்தவரை இர்ஃபான் விவகாரம் ஒரு புதிய விசயம். இதற்கு முன் இதேபோல் நடந்தது இல்லை. வெளிநாட்டில் அவர் பரிசோதனை செய்துள்ளார். ஆனால், அதைத் தமிழ்நாட்டில் வந்து வெளிப்படுத்தி இருக்கிறார். எனவே அது குற்றமா இல்லையா என நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இப்போது அவரே தொப்புள்கொடியை அறுத்தது குற்றமா? இல்லையா ? என்பது பற்றி விளக்கம் அளித்த முன்வந்த வழக்கறிஞர் விக்னேஷ் முத்துக்குமார், "நேஷனல் மெடிக்கல் கமிஷன் ஆக்ட் பிரிவு 34 படி நடவடிக்கை எடுக்க முடியும். இதற்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது 5 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம் என்று விளக்கம் அளித்திருந்தார்" என்று தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் 5 லட்சம் வரை அபராதம் மற்றும் சிறைத்தண்டனைக்கு வாய்ப்பு உள்ளது எனக் கூறும் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் 'இது ஒன்றும் கொலைக் குற்றம் கிடையாது' என்று எளிதாகக் கடந்து போகிறார். அதை மனதில் வைத்துத்தான் இர்ஃபான் சர்ச்சை முடிந்து 1 மாதம் கழிந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, "தி.மு.க. ஆட்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை, மக்களின் உயிர் காக்கும் துறையா? அல்லது மக்களின் உயிரைப் பறிக்கும் துறையா? என்ற சந்தேகம் அப்பாவி மக்களின் மனதில் எழுந்துள்ளது.

சட்ட விரோதமாகச் செயல்பட்டு, 'குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த யூ டியூபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்று முதலில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அந்த நபர் வாரிசு அமைச்சர் உதயநிதியுடன் அமர்ந்து சாப்பிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளிவந்தவுடன் அப்படியே பம்மிப் பதுங்குவதும், இது கொலைக் குற்றமா? என்று பத்திரிகையாளர்களிடமே கேள்வி கேட்பதும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த யூ டியூபர் இர்ஃபான், குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியதற்கும் எந்தவிதமான நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை என்பது புரியாத புதிர்" என்று அறிக்கை விட்டுள்ளார்.

சட்டப்படி இர்ஃபான் மீது மருத்துவமனை உள்ள சோழிங்கநல்லூர் காவல்துறைக்கு உட்பட்ட செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் தமிழ்நாடு ஊரக நலப்பணி இயக்குநரகம் சார்பில் ஒரு புகாரும் கொடுக்கப்பட்டது. அது குறித்து காவல்துறையினர் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பதற்காக விளக்கத்தை அமைச்சர் அளிக்கவே இல்லை. மாற்றாக மா.சுப்பிரமணியன் தன் அறிக்கையில், "எடப்பாடி பழனிசாமியா? எரிச்சல் சாமியா? என்ற அளவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மீது அவதூறு பரப்புகிறார் எதிர்க்கட்சித் தலைவர். திராவிட மாடல் ஆட்சியில் மருத்துவத்துறையில் உருப்பெற்ற திட்டங்களைப் பக்கம் பக்கமாகச் சொல்லிக் கொண்டே போகலாம். தங்களின் அர்ப்ப அரசியலுக்காக ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையைக் குறை கூறி குளிர் காய நினைக்காதீர்கள்" என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

இர்ஃபான் செய்தது குற்றம் என்பதால்தான் தமிழ்நாடு ஊரக நலப்பணி இயக்குநர் ராஜமூர்த்தி தலைமையிலான குழு அந்த விவகாரம் பற்றி ஆலோசனை நடத்தியது. மேலும் காவல்துறையில் புகாரும் அளித்தது. அது பற்றி விளக்கம் அளித்திருந்த ராஜமூர்த்தி, "அந்த வீடியோவை நானும் பார்த்தேன். தொப்புள்கொடியை அவர் கத்தரிக்கிறார். அப்படி அவர் செய்வதற்கு அனுமதி இல்லை. மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள்தான் அதைச் செய்ய முடியும். இர்ஃபான் முழுக் கை சட்டை அணியாமல் அறுவை சிகிச்சை அறைக்குள் உள்ளார். அதனால் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம்" என்று பேசி இருந்தார்.

இர்ஃபான் முறையான அனுமதி பெறாமல் அவர் அறுவை சிகிச்சை அறைக்குள் வீடியோ பதிவு செய்துள்ளார். அத்துடன் அவர் உரியப் பாதுகாப்பு இல்லாமல் உள்ளே இருந்துள்ளார். எந்த மருத்துவ நெறிமுறையையும் இர்ஃபான் கடைப்பிடிக்கவே இல்லை. சாதாரணமாக மருத்துவமனைக்குள் போன் பேசுவதையே மருத்துவர்கள் அனுமதிப்பது இல்லை. இவர் யூடியூப் சானல் பதிவுக்காக தொழில்முறை சார்ந்த கேமிராவுடன் உள்ளே சென்று அனைத்தையும் படம்பிடித்துள்ளார். அதை எந்தவித எச்சரிக்கை வாசகங்களையும் போடாமல் பொதுத் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இத்தனை குற்றங்களைச் செய்த இர்ஃபான் செய்தது கொலைக் குற்றம் இல்லை என்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். வழக்கமாக சமூக வலைத்தளங்களில் ஒருவர் ஏதேனும் கருத்துச் சொன்னாலே காவல்துறை விரட்டி விரட்டி உரிய நபரைக் கைது செய்கிறது. அதற்குக் கஸ்தூரி தொடங்கிப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். ஒருவர் உயிரோடு விளையாடி இருக்கிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை ஏன் எடுக்கப்படவில்லை என்பதற்கு உரியப் பதில் இதுவரை கிடைக்கவில்லை. அதற்கு என்ன காரணம்? சட்டத்தின் முன் இர்ஃபான் சமம் இல்லையா?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+