"பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பற்றிய டேட்டாவே இல்லாமல் சட்டமா" - வெளுத்து வாங்கிய வழக்கறிஞர்
சென்னை: உயர் ஜாதி வகுப்பு ஏழை மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பற்றிய டேட்டாவே இல்லாமல் சட்டம் எப்படி இயற்ற முடியும் என பாமகவின் வழக்கறிஞர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்ற பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
இந்தத் தீர்ப்பைக் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சமூகநீதிக்கு எதிரான EWS இடஒதுக்கீட்டுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்!" என்று கூறியுள்ளார்.

சட்டப் போராட்டம் தொடரும்
இது குறித்து மேலும் அவர், "சமூகநீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிராக பாஜக அரசு கொண்டு வந்த EWS வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு, சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்தில் ஒரு பின்னடைவு. இந்தத் தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து, EWS இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் தொடரும். சமூகநீதியைக் காக்கும் முதல் அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணிலிருந்து, சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திட, ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்." என அவர் தெரிவித்துள்ளார்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான தீர்ப்பு
இந்த வழக்கு தொடர்பாக மிக விரிவாக சில விளக்கங்களை முன்வைத்துள்ளார் பா.ம.கவின் வழக்கறிஞர் பாலு. மேலும் அவர் மிகக் கடுமையாக இந்தத் தீர்பை எதிர்த்துள்ளார். "ஒட்டுமொத்தமாக இந்தியா முழுமைக்கும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான தீர்ப்பு. அதேவேளையில் அரசியல் அமைப்புச் சட்டத்தினுடைய அடிப்படை கோட்பாட்டிற்கும், அந்த அரசியல் சாசனத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான சட்ட மேதைகளின் எண்ணத்திற்கும் எதிரானதாகும். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை சமூகரீதியாக பின் தங்கியவர்களாகக் கருதக்கூடாது.

சமூகரீதியாகப் பின்தங்கியவர்களை..
இந்த வாதம் ஏற்கனவே அரசியல் நிர்ணய சபையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கல்விரீதியாக, சமூகரீதியாகப் பின்தங்கியவர்களைத்தான் பிற்படுத்தப்பட்டவர்களாகக் கருத வேண்டும் என்று அரசியல் நிர்ணய சபை முடிவு செய்திருந்தது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்ற வார்த்தை அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோது பயன்படுத்தப்படவில்லை.

இன்றுவரை எடுக்கப்படவே இல்லை
இப்போது மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்குவதற்கான ஒரு முடிவை எடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தபோது அதற்கு இடைக்காலத் தடை வழங்கி இருக்கவேண்டும். ஏனென்றால் இந்தியாவில் முன்னேறிய சமூகத்திற்கான எண்ணிக்கை என்ன? என்பதற்கான புள்ளிவிவரங்கள் ஏதும் இல்லை. அதையும் தாண்டி முன்னேறியவர்களில் பொருளாதாரரீதியாக பின் தங்கியவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதற்கு தரவுகள் இல்லாமல் அரசியல் சாசனத்தில் 10% எனத் திருத்தப்பட்டுள்ளது தவறானது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் 1951இல் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்றுவரை எடுக்கப்படவே இல்லை.

உங்களிடம் என்ன புள்ளிவிவரம் உள்ளது
அந்த அடிப்படையில்தான் இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 69% இடஒதுக்கீடு பற்றிய வழக்கு வருகின்றபோது எல்லாம் 'உங்களிடம் என்ன புள்ளிவிவரம் உள்ளது?' என்று எல்லாம் சரமாரியாகக் கேள்விகளை முன்வைத்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் உள்ள அடிப்படை கேள்விகளை மத்திய அரசை நோக்கி முன்வைக்கத் தவறிவிட்டது.

நீதி வழங்கினால் மட்டும் போதாது
மேலும் இந்த வழக்கு நடைபெற்ற போது வழக்கறிஞர்கள் முன்வைத்த பல வாதங்கள் ஏற்கப்படவில்லை. இந்த வழக்கை விசாரித்த அந்த 5 நீதிபதிகளுமே முன்னேறிய சமூகத்தைச் சார்ந்தவர்கள். நீதி வழங்கினால் மட்டும் போதாது. நீதி வழங்கப்பட்டுள்ளதாக அறியப்பட வேண்டும்.

கோட்பாடுகள் மீறப்படுகின்றன
தன்னுடைய வழக்கிற்கு தானே தீர்ப்பு வழங்கக்கூடாது என்ற நீதித்துறையின் அடிப்படைக் கோட்பாடுகள் மீறப்படுகின்றன என்று ஒரு வழக்கறிஞர் ஒரு வாதத்தை வைத்தார். ஆனால் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நீதிபதி கவாய், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் போன்றவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட நீதிபதிகள் உச்சநீதிமன்றத்திலிருந்தும் கூட நடக்கவில்லை. இருதரப்புக்கான இந்தப் பிரச்சினையில் எல்லோரையும் இணைத்தே இந்த வழக்கை விசாரித்திருக்க வேண்டும்.ஆனால் நடத்தவில்லை.

நிபந்தனை விதித்ததே உச்சநீதிமன்றம்தான்
இப்போது உச்சநீதிமன்றம் 10% இடஒதுக்கீடு செல்லும் என்று சொல்லி இருக்கிறது. நான் கேட்கிறேன். இந்தியாவில் முன்னேறியவர்களுக்கு 10 விழுக்காடு கொடுக்கப்படும் போது, மண்டல் கமிஷன் வழக்கில் எந்த இடஒதுக்கீடும் 50% தாண்டக்கூடாது என்ற நிபந்தனையை விதித்ததே உச்சநீதிமன்றம்தான். இப்போது அது மீறப்பட்டுள்ளது.

கேள்விக்குள்ளாகி உள்ளது
இப்போது 50% தாண்டக்கூடாது என்பது அரசியல் சாசனத்தின் நோக்கம் அல்ல என்று சொல்கிறார்கள். அப்படி என்றால், இந்தியாவில் 51 சதவீதத்திற்கு அதிகமாக ஒரு மக்கள் இருந்தும் 27% தான் தர முடியும் என்ற நிலைக்குத் தள்ளியது உச்சநீதிமன்றம்தான். இப்போது அந்த இடஒதுக்கீட்டின் நிலை கேள்விக்குள்ளாகி உள்ளது" என்கிறார்.












Click it and Unblock the Notifications