வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்வோம் என உறுதியேற்போம்..ஓபிஎஸ் சொன்ன குடியரசு தின மெசேஜ்
சாதி, மதம், மொழி உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்வோம் என உறுதியேற்போம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: குடியரசு தின திருநாளில் தாய்த் திருநாட்டில் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூக நீதி தழைத்தோங்க, நாம் அனைவரும் சாதி, மதம், மொழி உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்வோம் என உறுதியேற்போம் என்று ஓ.பன்னீர் செல்வம் தனது குடியரசு தின வாழ்த்துச்செய்தியில் பதிவிட்டுள்ளார்.
நாட்டின் 74 ஆவது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியரசு தின விழாவிற்கு வருகை புரிந்த ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து முப்படை வீரர்கள், காவல்துறை சிறப்பு படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடைபெற்றது. பள்ளி,கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், அதனைத் தொடர்ந்து அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறி வருகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், " அந்நியர்களின் அடக்கு முறையை தகர்த்தெறிந்து இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசித்த பின், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்த திருநாளான ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
இத்திருநாளில் தாய்த் திருநாட்டில் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூக நீதி தழைத்தோங்க, நாம் அனைவரும் சாதி, மதம், மொழி உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்வோம் என உறுதியேற்போம்! " என்று குறிப்பிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள இந்த சூழ்நிலையில் பிளவு பட்டிருக்கும் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒற்றுமையை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட பிரச்சினையில் ஒ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து பிரிந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு போகவே ஆட்சியை காப்பாற்ற ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது ஏற்பட்ட உடன்பாட்டில், கட்சியை ஓ.பன்னீர் செல்வம் கவனித்துக்கொள்ள, ஆட்சியை கவனித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டன.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும் துணை ஒருங்கிணைப்பாராக எடப்பாடி பழனிச்சாமியும் செயல்பட்டனர். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியாவிட்டாலும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு வெற்றி பெற்று சட்டசபை எதிர்கட்சி தலைவரானார் எடப்பாடி பழனிச்சாமி. சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவரானார் ஓ.பன்னீர் செல்வம்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அதிமுகவில் காட்சிகள் மாறின. ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாகவே பொதுக்குழுவில் சிக்கல் உருவானது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு மீண்டும் கூடியது. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர்.
இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாகவும், எடப்பாடி பழனிச்சாமி தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். மீண்டும் இணைந்து செயல்பட ஓ.பன்னீர் செல்வம் விரும்பம் தெரிவித்தாலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதற்கு தயாராக இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் கட்சியின் நலத்திற்காக ஓ.பன்னீர் செல்வத்துடன் பேச தயாராக இருப்பதாக கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்றும் ஒற்றுமையுடன் அனைவரும் இணைந்து செயல்பட விரும்புவதாகவே கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அவரது அழைப்பை ஏற்றுக்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தயாராக இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் குடியரசு தின விழா வாழ்த்துச்செய்தியில் கூட வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்வோம் என உறுதியேற்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.