வண்ணமயமான சென்னை.. உரிமை, அடையாளத்துக்காக அணிதிரண்ட LGBTQ செயற்பாட்டாளர்கள் -ஆடல், பாடலுடன் அமர்களம்
சென்னை: உலக LGBTQ வாரத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற வானவில் திருவிழா சுயமரியாதை பேரணியில் ஏராளமானோர் விதவிதமான ஆடைகள் அணிந்து பதாகைகளை ஏந்தி கலந்துகொண்டனர்.
Recommended Video
ஜூன் மாதத்தின் முதல் வாரம் உலகம் முழுவதும் LGBTQ சமூகத்துக்கான சிறப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை லாங்க்ஸ் கார்டன் சாலையில் சென்னை பிரைட் என்ற பெயரில் வானவில் விழாவும் சுயமரியாதை பேரணியும் நடைபெற்றது.

விருப்பமான ஆடை, அலங்காரம்
இந்த விழா மற்றும் பேரணியை திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் LGBTQ அடையாளத்தை உணர்த்தும் வகையில் ஆண் பெண் என்று வரையறுக்கப்பட்டு உள்ள ஆடைகள், சிகையலங்காரங்களை புறம்தள்ளி தங்கள் உணர்வுகளுக்கு பிடித்த ஆடைகளை பலர் அணிந்து, அலங்காரம் செய்து வந்தனர்.

கலை நிகழ்ச்சிகள்
ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட LGBTQ சமூகத்தினர் மட்டுமின்றி, அவர்களின் உரிமைகளுக்காக போராடும் சமூக செயற்பாட்டாளர்களும் இதில் கலந்துகொண்டு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த விழா மற்றும் பேரணியில் LGBTQ உரிமைகளை வலிறுத்தி ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பெரியார், அம்பேத்கர் படங்கள்
வானவில் நிறங்களை கொண்ட LGBTQ கொடியை சுமந்தபடி ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டது வண்ணமயமாக இருந்தது. பலரும் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்ற சமத்துவத்துக்காக போராடிய தலைவர்களின் கருத்துக்கள் எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தி நின்றனர். பாலின சமத்துவம், பாலியல் சுதந்திரத்தை வலியுறுத்தியும், தங்களையும் சமூகத்தில் வேறுபாடின்றி நடத்தக்கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு அரசுக்கு நன்றி
இந்த நிகழ்வின்போது தங்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வரும் தமிழ்நாடு அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். அரசு சார்பில் தங்களுக்கு மேலும் பல உதவிகளை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், "மகிழ்ச்சியாக, சுதந்திரமாக, உரிமையுடன் சென்னை வீதியில் உங்களை பார்க்கும்போது அதனை வர்ணிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை.

தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு
இந்த பூமியில் பிறந்த அனைவருக்கும் அவரவர் பிறப்பின்படி, அவரவர் விருப்பப்படி எல்லா விதமான உரிமைகளோடு தங்களின் பாலினத் தேர்வை உறுதி செய்துகொள்ளவும் அதன்படி வாழவும் உரிமை உள்ளது. அதனை நாமும் நம்புகிறோம். உங்களோடு திமுக எப்போதும் துணை நிற்கும். உங்களுக்காக குரல் எழுப்புவதை கருணாநிதி காலம் முதல் மு.க.ஸ்டாலின் காலம் வரை நாம் செய்து வருகிறோம்." என்றார்.












Click it and Unblock the Notifications